‘காலம் கண்டபடி மாறலாம்; ஆனாலும் நட்பை நட்பாக பார்க்கிறவர்கள் எப்போதும் இருப்பார்கள்’ என்பதை சொல்கிற படம்.
சிறுவயதிலிருந்து பழகி, நெருங்கிய நண்பர்களாகி, சேர்ந்து பிஸினஸ் தொடங்கி சக்ஸஸ்ஃபுல்லாக நடத்தி வருகிறது கார்த்திக், மோனி கூட்டணி. பல வருடப் பழக்கம், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள், அதனால் கார்த்திக்கும் மோனியும் ஒரு கட்டத்தில் காதலில் விழுவார்கள் என நட்பு வட்டம் எதிர்பார்க்கிறது. ஆனால், அவர்கள் காதலர்களாக மாறாமல் நண்பர்களாகவே நாட்களைக் கடத்துகிறார்கள். இப்படியான சூழலில் பவித்ரா என்ற இளம்பெண் கார்த்திக்குடன் பழக, சிலபக நாட்கள் கடந்தோட அவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கார்த்திக் பவித்ராவுடன் பழகுவதைப் பார்த்து மோனிக்கு ஒருவித எரிச்சல் உணர்வு வருகிறது.
அப்படியெனில் கார்த்திக்கை மோனி காதலித்துக் கொண்டிருந்தாளா? ஒருவேளை அவள் கார்த்திக்கை காதலித்தால், கார்த்திக் _ பவித்ரா காதல் என்னவாகும்?
கதையில் இப்படியொரு பரபரப்பு சேர்ந்துகொள்ள, பவித்ராவுக்கு அசம்பாவித சம்பவம் ஒன்று நடக்க, மோனிக்கு கார்த்திக் மாப்பிள்ளை பார்க்க என அடுத்தடுத்த அத்தியாயங்கள் சுவாரஸ்யமாக கடந்தோடுகின்றன.
கார்த்திக்காக ஜகவீர். எளிமையான தோற்றத்திலிருக்கிற அவரின் நடிப்பிலும் அதே எளிமையைப் பார்க்க முடிகிறது.
மோனியாக வருகிற மீனாட்சி கோவிந்தராஜனின் ஸ்டைலிஷ் லுக் அசத்துகிறது. கார்த்திக் மீதான பொஸசிவ்னஸை வெளிப்படுத்தும்போது கெத்து காட்டுபவர், தோழி மணவாழ்க்கையின் அவஸ்தைகள் குறித்து எடுத்துச் சொன்னதும் குழப்பத்துக்கு ஆளாகி கேரக்டரின் தனித்துவத்தை சிதைக்கிறார்.
கார்த்திக், மோனி இருவருக்கும் நண்பராக வருகிற பாலசரவணன் காமெடி கலகலப்புக்கு ஓரளவு உதவியிருக்கிறார். சிங்கம்புலி வில்லன் போல் நடந்துகொண்டு அவர் பங்களிப்புக்கு கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார்.
பவித்ராவாக வருகிற லத்திகாவின் அழகும் உணர்வுபூர்வமான நடிப்பும் அவருக்கான காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஜெயபிரகாஷ், வினோதினி, ஜி பி முத்து என மற்றவர்கள் அவரவர் கடமையைச் சரியாகச் செய்திருக்க,
ஜெயபிரகாஷின் மகளை கல்யாணம் செய்து கொள்கிறவராக வந்துபோகிறவர் ஜெயபிரகாஷின் சொந்த மகன் துஷ்யந்த் ஜெயபிராகாஷ் என்பது விசேஷ செய்தி.
டி இமான் இசையில் ‘உயிரில் உயிரில் ஒரு தாளம் பிறந்திட’ என்ற ஃபிரி வெட்டிங் போட்டோ ஷூட் பாடல் ரசிக்க வைக்கிறது; பாடல் காட்சி மனதைக் கொள்ளையடிக்கிறது. ‘எதுவரை உலகமோ’ பாடல் கதைக்களத்திற்கு பொருத்தம்.
அனந்த கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நிறைவு.
படத்தின் உருவாக்கம் காலத்திற்கேற்றபடி இல்லாவிட்டாலும்,
2கே கிட்ஸ் என்று சொல்லப்படுகிற இளைய தலைமுறை வாழ்க்கையை மனம்போன போக்கில் வாழ்ந்தாலும், அவர்களிலும் காதல் _ நட்பு இரண்டையும் குழப்பிக் கொள்ளாதவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை விதைத்திருப்பதற்காக இயக்குநர் சுசீந்திரனை பாராட்டலாம்.

