கண்களை மூடிக் கொள்ளுங்கள். வங்கிக் கொள்ளை சம்பவங்களை மையப்படுத்தி இதுவரை வந்தவற்றில் தாங்கள் பார்த்த படங்களையெல்லாம் நினைவுக்கு கொண்டு வாருங்கள். இந்த படத்திலும் அதேபோன்ற காட்சி…
ஒரு சாமனிய மனிதன் பெரிய தொகையை டெபாசிட் செய்யப் போவதாக சொல்லி அந்த வங்கிக்குள் நுழைகிறான். நுழைந்தவன் தன்னிடமுள்ள டைம் பாமையும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டி வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். அதே நேரத்தில் அவனுடைய நண்பன் ஒருவன் அதே வங்கியின் மேனேஜர் வீட்டுக்குள் துப்பாக்கியோடு நுழைந்து மேனேஜரின் மனைவிக்கு பயம்காட்டி வீட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். சாமானியனின் இன்னொரு நண்பன் அதே வங்கியின் அசிஸ்டென்ட் மேனேஜர் வீட்டுக்குள் துப்பாக்கியோடு நுழைந்து மேனேஜரின் கர்ப்பிணி மனைவியை மிரட்டி வீட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான்.
இப்படி தீ பிடித்தது போன்ற பரபரப்பாக தொடங்கும் கதையில், மூவருமாக சேர்ந்து வங்கியிலிருந்து பெரியளவில் பணத்தையோ நகையையோ கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்று பார்த்தால், அப்படி எதையும் செய்யாமல் தங்கள் தரப்பிலிருந்து உயிரிழந்த உயிர்களுக்கு நியாயம் கேட்கிறார்கள். சில கோரிக்கைகளையும் முன் வைக்கிறார்கள்… அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் உயிர்களை காப்பாற்ற வேண்டிய கடமையில் காவல்துறை இறங்க கதைக்களம் சூடு பிடிக்கிறது.
வங்கியையும், வங்கி மேனேஜர்களின் வீட்டையும் சுற்றி வளைத்த அந்த மூன்று பேரின் பின்னணி என்ன? அவர்கள் தரப்பில் உயிரிழந்தது யார் யார்? அவர்களுக்கும் வங்கிக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக கடந்தோடுகிறது திரைக்கதை.
பல வருடங்கள் கழித்து வந்திருக்கும் ராமராஜனின் உடலில் தளர்ச்சி தெரிந்தாலும் உருட்டலும் மிரட்டலுமான முகபாவங்களால் ‘இந்தியன்’, ‘அந்நியன்’ பாணியிலான தனது பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்.
ராமராஜனின் நண்பர்களாக வருகிற ராதாரவி, எம் எஸ் பாஸ்கரிடமிருந்து வழக்கம்போல் தேர்ந்த நடிப்பு வெளிப்பட, கட்டுமான நிறுவன உரிமையாளராக வருகிற மைம் கோபியின் வில்லத்தனமும் வழக்கம்போலவே டெலிவரியாகியிருக்கிறது.
உற்சாகமாக மண வாழ்வைத் தொடங்கி, லோனில் வீடு வாங்கி, கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு, பரிதாப முடிவை சந்திக்கிற லியோ சிவகுமார், நக்ஷா சரண் ஜோடியின் அமைதியான அளவான நடிப்பு காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
அயோக்கியனுக்குத் துணை போகிற பேங்க் மேனேஜராக போஸ் வெங்கட், அவரது மனைவியாக வினோதினி, போலீஸ் உயரதிகாரியாக கே.எஸ். ரவிக்குமார், மீடியா பர்சனாலிடியாக அபர்ணதி, கூடவே கஜராஜ், ஸ்ம்ருதி வெங்கட், தீபா சங்கர், முல்லை(கோதண்டம்), சரவணன் சுப்பையா என மற்றவர்களின் நடிப்புப் பங்களிப்பு திருப்தி.
இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் மனதுக்கு இதத்தையும், இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்ற உணர்வையும் தருகின்றன. பின்னணி இசை காட்சிகளின் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது.
கச்சிதமான ஒளிப்பதிவும், நேர்த்தியான எடிட்டிங்கும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன.
சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்பதை வாழ்நாள் கனவாக கொண்டிருப்பவர்கள், தங்கள் தகுதிக்கு மீறி லோன் வாங்கும்போது சந்திக்கிற கஷ்ட நஷ்டங்களை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கும் இயக்குநர் ராஜேஷ்,
லோன் கொடுக்கிற வங்கிகள் செய்கிற அராஜகங்களை, கட்டுமான நிறுவனத்தினர் செய்கிற அநியாயங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி விழிப்புணர்வை தூண்டியிருப்பது ஒட்டுமொத்த சாமானியனும் பாராட்ட வேண்டிய சங்கதி.
சாமானியன் – எளிய மக்களின் பாதுகாவலன்!
Rating 3.5 / 5