இலங்கையில் சிங்கள அரசின் கொடுமைகளை எதிர்த்து ஈழத் தமிழர்கள் எப்படியான போராட்டங்களை நடத்தினார்கள், எந்தளவுக்கு ஆயுதபலம் கொண்டிருந்தார்கள் என்கிற வரலாறு முழுவதையும் உலகமறியும். அவற்றை திரைப்படங்களிலும் பார்த்துள்ளோம். அதே போராட்டக் குழுவினர் ‘மக்கள் ராணுவ மருத்துவப் பிரிவு’ என ஒன்றை கட்டமைத்து அதை ராணுவ ஒழுங்குடனும் முழுக்க முழுக்க மனிதாபிமானத்துடனும் நடத்தி வந்ததை இதுவரை திரைப்படங்களில் யாரும் எடுத்துக் காட்டியதில்லை. இந்த படம் அதை செய்திருக்கிறது.
மேலே குறிப்பிட்ட மருத்துவப் பிரிவுகளில் பணியாற்றிய மருத்துவர்கள் ‘சல்லியர்கள்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே படத்திற்கு அப்படியொரு தலைப்பு.
ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதற்காக சிங்கள அரசு நடத்தும் போரில் தாக்கப்பட்டு, குண்டடி பட்டு உயிருக்குப் போராடுகிறவர்களை காப்பாற்றும் நோக்கில், பதுங்கு குழிக்குள் வசதிகள் செய்துகொண்டு செயல்படுகிறது ‘மக்கள் ராணுவ மருத்துவப் பிரிவு.’ சிங்கள அரசு அந்த கட்டமைப்பை தகர்க்க பெரியளவில் சதித் திட்டம் தீட்டுகிறது. அதை தமிழர்களின் மருத்துவப் பிரிவு எப்படி எதிர்கொள்கிறது என்பது இந்த படத்தின் திரைக்கதை.
மருத்துவப் பிரிவை கவனித்துக் கொள்ளும் மருத்துவராக வருகிறார் சத்யதேவி. பதுங்கு குழிக்குள் இருந்தபடியே வெளியில் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக அறிந்துகொள்ளும் புத்திசாலித்தனம் வியக்க வைக்கிறது. தாறுமாறாக தாக்கப்பட்டு, குண்டு துளைத்து ரத்தம் கொட்டக்கொட்ட தன்னிடம் வந்து சேர்கிற போராளிகளைக் காப்பாற்ற அவர் எடுத்துக் கொள்ளும் அக்கறையும் சுறுசுறுப்பும் வெளிப்படுத்தும் மனிதாபிமானமும் மருத்துவப் பிரிவில் எப்படியான மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக தெரிகிறது. அவர் ஏன் குறிப்பிட்ட அந்த மருத்துவப் பிரிவில் இணைந்தார் என்பதற்கு சொல்லும் காரணம் ஃபிளாஷ்பேக்காக விரிய மனம் கனத்துப் போகிறது. சிங்கள ராணுவ வீரன் ஒருவனும் அந்த மருத்துவப் பிரிவுக்கு குண்டடிபட்டு உயிருக்குப் போராடியபடி வந்து சேர அப்போது அவர் எடுக்கும் நடவடிக்கை மனிதாபிமானத்தின் உச்சம்.
சத்யதேவி பொறுப்பிலிருக்கும் மருத்துவப் பிரிவுக்கு வந்து சேர்ந்து, அவரது வழிகாட்டுதலின்படி பணியாற்றுகிற மருத்துவராக மகேந்திரன். அவரது ஈடுபாடான செயல்பாடுகள் ஈழப்போராளிகளின் மருத்துவப் பிரிவு மீது மதிப்பை அதிகரிக்கிறது.
சத்யதேவியின் தந்தையாக வருகிற கருணாஸ் போராளிகளுக்காக ரத்தம் சேகரிக்கும் நிமிடங்கள் படத்தின் மிகமுக்கியமான தருணங்களாக இருக்க, அதன் விளைவுகளை அவர் அனுபவிக்கும்போது கண்கள் கலங்குவது உறுதி.
‘களவாணி’ திருமுருகன், சந்தோஷ், மோகன் உள்ளிடோர் சிங்கள ராணுவ அதிகாரிகள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.
கென், ஈஸ்வர் கூட்டணி தந்திருக்கும் இசையில், வைரமுத்துவும் இந்த படத்தின் இயக்குநர் கிட்டுவும் எழுதியிருக்கும் உணர்ச்சி பொங்கும் பாடல்கள் கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்க, சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தைக் கூட்டியிருக்கிறது. தொலைத் தொடர்பு வசதிகளுடன் இயங்கும் ராணுவ மருத்துவப் பிரிவு, பதுங்கு குழிக்குள் சிகிச்சையகம் என பலவற்றில் கலை இயக்குநரின் பங்களிப்பு தெரிகிறது.
‘உயிரை விட்டுவிடலாம்; உரிமைகளை விட்டுத்தர முடியாது’ என்ற உறுதியுடன் போராடியவர்களின் வரலாற்றை எத்தனைமுறை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்; நாடகமோ, சமூக வலைதள வீடியோக்களோ, குறும்படமோ, திரைப்படமோ எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம். அப்படி தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் ottplus.in என்கிற ஓடிடி தளத்திற்கு செல்லலாம்.
Rating 3.5 / 5 

