சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 – வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவுப்பரிசாக சபாநாயகருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 4500 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்ட எஸ்.ஜெ.சூர்யாவுக்கு 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளில் உலக அரங்கில் சாதிக்க வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த்,
தொழில்துறையில் குறுகிய காலத்தில் 700 கடைகளுடன் உலகளவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான், நேச்சுரல்ஸ் குழும அழகு நிலையங்களின் உரிமையாளர் திரு.சி.கே.குமரவேல். 1000 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதே லட்சியமாக கொண்டு செயல்பட்டுவரும் திரு சி கே . குமரவேல் ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சபாநாயகர் ஓம் பிர்லா தனது உரையில், திரு எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மறைந்த திரு. ஐசரி வேலனின் பாரம்பரியத்தை தொடரும் அவரது மகனான டாக்டர். ஐசரி கணேஷின் தொலைநோக்கு தலைமையின் கீழ் பல்கலைக்கழகம் முன்னேற்ற பாதையில் பயணிக்கின்றது என பாராட்டினார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வடிவமைப்பதில் டாக்டர் கணேஷின் அவர்களின் பங்கு அளப்பரியது என்றும் பல்கலைக்கழகத்தில் பல சிறப்பு மையங்களை உருவாக்க வழிவகுத்த சிந்தனை மற்றும் அணுகுமுறையை ஆகியவற்றை கண்டு வியக்கிறேன்.
இன்று எனக்கு முன்னால் தன்னம்பிக்கையுடன் அமர்ந்துள்ள பட்டதாரிகளைப் பார்க்கும்போது, நான் மாணவர்களை மட்டுமல்ல, எதிர்காலத் தலைவர்களையும்பார்க்கிறேன். நீங்கள் ஒரு ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) தூண்கள், மேலும் நமது தேசத்தை 21 ஆம் நூற்றாண்டிற்கு வழிநடத்தும் பொறுப்பு இப்போது உங்கள் மீது உள்ளது.
பணிவு மற்றும் நேர்மையின் முக்கியத்துவத்தை போதித்தவர், தமிழகத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். அவரின் வழி நடந்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் செலுத்துவோம்” என்றார்.