மலைவாழ் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பதிவு செய்யும் படங்களின் வரிசையில் ‘நாடு.’
தேவ’நாடு’ எனும் மலை கிராமத்திலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு எந்த மருத்துவரை நியமித்தாலும் அவர்கள் பணியில் நீடிக்க மறுக்கிறார்கள். அதற்கு அந்த ஊரில் அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பது, புலி உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் என சில காரணங்கள்… மருத்துவமனை இருந்தும் மருத்துவர்கள் பணியில் தொடர விரும்பாததால் மக்கள் உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறமுடியாமல் தவிக்கிறார்கள். உயிரிழப்புகளையும் சந்திக்கிறார்கள். அந்த பிரச்சனை வருடக்கணக்கில் தொடர்கிற சூழலில் கலெக்டர், பெண் மருத்துவர் ஒருவரை அந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார். ‘அவரை நல்லபடியாக கவனித்துக் கொண்டால், பாதுகாப்பாய் பார்த்துக் கொண்டால் ஒருவேளை அவர் பணியில் தொடரும் முடிவை எடுக்கக்கூடும். எதுவானாலும் அது உங்கள் கையில்’ என்கிறார்.
மருத்துவர் பணியில் சேர்கிறார். அன்றே வீட்டுக்கு வெளியே புலி நடமாடுவதைப் பார்த்து அதிர்கிறார். அதையடுத்து அந்த மருத்துவர் ‘சில நாட்கள் மட்டுமே என்னால் பணியில் தொடர முடியும், அதற்கு மேல் முடியாது’ என்கிறார்.
சிகிச்சைக்கு வருபவர்களை கனிவாக கவனிப்பதால் மக்களுக்கு மருத்துவரை பிடித்துப் போகிறது. எப்படியாவது அவரை தங்கள் கிராமத்தில் மருத்துவப் பணியை தொடர வைக்கவேண்டும் என முடிவெடுக்கிறார்கள். அதற்காக கிராம மக்கள் வேலைவெட்டி அனைத்தையும் தூக்கி ஓரமாய் வைத்துவிட்டு மருத்துவரை கவனித்துக் கொள்ள, அந்த பகுதியில் சுற்றித் திரியும் புலியிடமிருந்து பாதுகாக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்கிறார்கள். இடையில் அந்த மருத்துவருக்கு வெளிநாட்டு வரனுடன் திருமண நிச்சயதார்த்தம் வேறு நடக்கிறது. இப்படி கடந்தோடும் கதையில், மருத்துவரை பணியில் தொடரவைக்க மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பலன் கிடைத்ததா இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.
கதைநாயகனாக வரும் ‘பிக்பாஸ்’ தர்சன் கிராம மக்கள் மருத்துவரின் மனதில் இடம்பிடிக்க அவருக்காக தனி டீ கடை தொடங்குவது, புலியை சிறைபிடிக்க திட்டமிடுவது, அவருக்கு பிடித்ததுபோல் சமைத்துக் கொடுக்க பெண் ஒருவருக்கு பயிற்சியளித்து நியமிப்பது என மக்களின் ஒத்துழைப்போடு பல விசயங்களை செயல்படுத்துவதில் உணர்வுபூர்வமான, உயிரோட்டமான நடிப்பால் மனதில் நிறைகிறார்.
பணியிலிருக்கும்போது சிகிச்சைக்கு வருபவர்களை அன்போடு அணுகுவது, தான் பணியைத் தொடராவிட்டாலும் மக்களில் சிலருக்காவது ஆபத்துகால முதலுதவி சிகிச்சைகளை சொல்லிக் கொடுத்துவிட வேண்டுமென முயற்சிப்பது என அலட்டலற்ற நடிப்பால் ஈர்க்கிறார் மகிமா நம்பியார்.
ஊர்ப் பெரியவராக கதையின் முக்கிய பாத்திரத்தை சுமந்திருக்கிறார் ஆர் எஸ் சிவாஜி. அவருக்கு தோள் கொடுத்து மக்கள் மீது அக்கறை காட்டியிருக்கிறார் சிங்கம் புலி. மற்ற நடிகர், நடிகைகளும் கதையின் தேவையை தங்கள் நடிப்பால் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
பின்னணி இசைக்கு போதிய உழைப்பைக் கொடுத்துள்ள சி.சத்யா ‘கல்யாணமாம் கல்யாணம்’ பாடல் முழுக்க உற்சாகத்தை ஊற்றி நிரப்பியிருக்கிறார்.
சக்தியின் ஒளிப்பதிவில் மலைகிராமத்தில் பரந்துவிரிந்த அழகு கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது.
மருத்துவரை தக்கவைத்துக் கொள்வதற்கான மக்களின் செயல்பாடுகளில் சில சிரிப்பைத் துண்டுகின்றன.
உருவாக்கத்தில் சில குறைகள் இருந்தாலும் படமாக்க எடுத்துக்கொண்ட விஷயத்திற்காக, மலைவாழ் மக்களின் வலியை பதிவு செய்திருப்பதற்காக இயக்குநர் சரவணனை ‘எங்கேயும் எப்போதும்‘ பாராட்டலாம்!