யாரும் அணுகாத கோணத்தில் ஒரு கதை.
தேன்மொழி இளம்பெண்; திருமணமானவள்; தற்கொலை செய்து கொள்கிறாள்.
தன் மகளை இழந்ததற்கு தன் மனைவிதான் காரணம் என்ற முடிவுக்கு வருகிற தேன்மொழியின் தந்தை, மனைவியைப் பிரியும் முடிவுக்கு வருகிறார். அதற்கு முன் மகளின் அஸ்தியைக் கரைக்க கணவனும் மனைவியுமாக ராமேஸ்வரம் நோக்கி காரில் புறப்படுகிறார்கள். பயணத்தின் இடையில் தேன்மொழியை காதலித்து பிரிந்த இளைஞனை சந்திக்கிறார்கள்.
இப்படி சுறுசுறுப்படையும் கதையில், தான் காதலித்த பெண்ணின் அஸ்தியைப் பார்க்கும் அந்த காதலனின் மனம் படும்பாடு, அவனைப் பார்த்த தேன்மொழியின் பெற்றோரின் மனநிலை என உணர்வுகளின் கலவையாக அடுத்தடுத்த காட்சிகள் நகர்கின்றன. அஸ்தியைக் கரைக்கும் இடத்துக்கு போனபின் எதிர்பாராத விபரீதம் ஒன்று நடக்கிறது. அது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
தேன்மொழியின் தந்தை மகள் இறந்ததற்காக மனைவியை பிரிய வேண்டும் என்ற முடிவுக்கு ஏன் வருகிறார்? என்பதற்கான பதிலில் படம் சொல்ல வருகிற ஆழமான விஷயம் இருக்கிறது.
தேன் மொழியாக காயத்ரி. தான் காதலிப்பது தெரிந்து அவன் நம்ம சாதியா என கேட்டுப் பதறுகிற அம்மாவிடம் காட்டும் துணிச்சல், காதலனுடன் செலவிடும் நேரங்களில் காட்டும் உற்சாகம், தன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் அப்பா மீதான பாசம் என தனக்கு கொடுக்கப்பட்ட மிகச்சில காட்சிகளில் துறுதுறுப்பான நடிப்பைத் தந்து விடை பெறுகிறார்.
தேன்மொழியைக் காதலிக்கும்போது பரவச உணர்வில் மிதப்பது, அவளது அஸ்தியைப் பார்க்கும் தருணத்தில் மனம் உடைவது என கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் லிங்கேஷ்.
கீழ் சாதிக்கார இளைஞனை காதலித்ததை குற்றமாக கருதி எதிர்ப்பு தெரிவிக்கும்போது ஒருவித நடிப்பு, மகளை இழந்தபின் அவளது விருப்பத்துக்கு தடை போடாமலிருந்தால் இறந்திருக்க மாட்டாளே என்ற எண்ணம் தருகிற குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடு என காட்சிக்கு காட்சி அனுமோலின் நடிப்பு தரம்.
மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தும் பலனில்லாமல் போன வருத்தம், மகளை இழந்த துக்கம், மகளை காதலித்த நபருடன் நெகிழ்ச்சியான உரையாடல் என உணர்வுபூர்வ மனிதனாக களமாடியிருக்கிறார் ஐசக்.
பிரிந்துபோன மனைவி மீதான வெறுப்பு, அந்த மனைவி விபத்தில் சிக்கியது தெரியும்போது வெளிப்படுத்தும் கோபம், தன் பிள்ளை போனில் பேசும்போது கண்கலங்கி நிற்பது என ரமேஷ் திலக்கின் நடிப்பு கவனம் பெறுகிறது. மனம் முழுதும் பிரச்சனைகளை நிரப்பி வைத்துக் கொண்டிருக்கிற அவர் இந்த கதையில் மனநல மருத்துவர். என்னவொரு சுவாரஸ்யம்!
கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் புதுச்சேரியில் துவங்கி ராமேஸ்வரம் வரை காரில் பயணிக்க, அந்த கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் இருக்கிற இயற்கை வளத்தை அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்ரமணியன்.
மெதுமெதுவாய் நகரும் காட்சிகளை தன் பின்னணி இசையால் பரபரப்பாக நகர்வது போல் மாற்ற முயற்சித்திருக்கிறார் ஜஸ்டின்.
தங்கள் பிள்ளைகள் தாழ்ந்த சாதியிலிருந்து தங்களுக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் முடிவுக்கு வரும்போது அதை எதிர்த்து அப்பா, அண்ணன், தம்பி என ஆண்கள்தான் களமிறங்குவார்கள்; ஆணவக் கொலை என்ற பெயரில் உயிரையும் பறிக்கத் தயாராவார்கள் என்கிற நடைமுறைதான் ஊர் உலகத்துக்கு தெரியும். ஆனால், அப்படியான விவகாரத்தில் பெண்களும் சளைத்தவர்கள் இல்லை; அவர்களும் ஆணவக் கொலைக்கு காரணமாக மாறுவதுண்டு என்பதை எடுத்துச் சொல்லி தனித்துவம் பெறுகிறார் படத்தை இயக்கியிருக்கிற எழுத்தாளர் தமயந்தி..
காயல் _ வித்தியாசமான கருத்துப் பாய்ச்சல்!
Rating 3.5 / 5


