மனம்விட்டுச் சிரிக்கும்படியான ஒரு படம்.
தரமற்ற பொருட்கள் தயாரிப்பவர்களை நீதிமன்றத்துக்கு இழுத்து தீர்வு காண்பது, மக்கள் சந்திக்கிற பொது பிரச்சனைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடுவது என போராளியாக வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கும் நடுத்தர வயதிலிருக்கும் வரதராஜன் இறந்து போகிறார்.
அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? இயற்கை மரணமா? என்ற குழப்பங்கள் உருவாகிறது.
போலீஸ் தரப்பு, வரதன் குடியிருந்த வீட்டின் முதலாளியின் பேரன் குமரன் அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்பட்டு விசாரணையைத் துவங்குகிறது.
இப்படி சீரியஸாக துவங்குகிற கதை, அந்த பேரனுக்கு சிலர் மீது சந்தேகம் வந்து விசாரிக்கத் துவங்கும்போது காமெடி களேபராக மாறுகிறது. வரதனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ்…
வரதனால் பாதிக்கப்பட்ட சிலர் மீது குமரனுக்கு சந்தேகம். அதை தெளிவுபடுத்திக் கொள்ள ஒருவரை சி பி ஐ ஆபீசர் போல் அவர்களின் இருப்பிடத்துக்கு அனுப்புகிறார். அந்த ஒருவர் வினோத்சாகர். பெரும் பணக்காரர்களை நேருக்கு நேர் சந்தித்து விசாரிக்கும்போது பயத்தில் அவர் செய்கிற சொதப்பல்கள் அத்தனை சுவாரஸ்யம்; சிரிக்கவே கூடாது என சபதம் எடுத்திருப்பவர்களைக் கூட சிரிக்க வைத்துவிடும். அந்தளவுக்கு மனிதர் அலப்பரை செய்திருக்க, கெட்டப்களும் அசத்துகின்றன.
குமரனாக நடித்திருப்பவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமான குமரன் தங்கராஜன். அறிமுகப் படமே மக்களுக்குப் பிடித்த படமாக மாறியிருக்கிறது. அந்த விதத்தில் குமரன் வெரி வெரி லக்கி. கேரக்டரின் தேவைக்கேற்ப அலட்டலில்லாமல் நடித்திருக்கும் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
பொதுநல வழக்குகள் போடுவதையும், போராட்டங்களில் ஈடுபடுவதையும் அர்ப்பணிப்புடன் செய்கிற, அதனால் வரும் எதிர்ப்புகளை மிரட்டல்களை துணிச்சலாக சந்திக்கிற மனிதராக, நல்லெண்ணங்களின் ஒட்டுமொத்த உருவமாக வலம் வந்து மனதில் நிறைகிறார் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிப்பைத் தருகிற இளங்கோ குமரவேல்.
பாயல் ராதாகிருஷ்ணனுக்கு லட்சணமாக முகம். சிரிக்கும்போது அந்த லட்சணம் கூடுகிறது. அந்த சிரிப்போடு குமரனின் காதலியாக அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார். அதைத் தாண்டி எதையும் செய்ய கதையில் வாய்ப்பில்லை.
பால சரவணன் குறைவைக்காமல் அவர் பங்குக்கு கலகலப்பூட்டுகிறார்.
குமரனின் தாத்தாவாக ஜி எம் குமார், இன்ஸ்பெக்டராக சிவா ஆனந்த், திரைப்படத் தயாரிப்பாளராக லிவிங்ஸ்டன் என மற்றவர் நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
அச்சு ராஜாமணியின் பின்னணி இசை, ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு இரண்டும் கதையோட்டத்திற்கேற்ற கச்சிதம்.
ஒரு மரணத்தின் பின்னணி என்ன என்பதை கண்டுபிடிக்கிற கதையை எடுத்துக் கொண்டு, காமெடி கலாட்டாக்களுடன் திரைக்கதை அமைத்து பாலாஜி வேணுகோபால் இயக்கியிருக்கும் இந்த படத்தை நம்பி போகலாம். ரசித்துச் சிரித்து உற்சாக மனநிலையோடு திரும்பலாம்!

