கிரைம் திரில்லர் படங்களின் வரிசையில் மற்றுமொரு வரவாக ‘குற்றம் புதிது.’
கதாநாயகி காணாமல் போகிறாள். கதாநாயகன் அவளை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாக போலீஸில் சொல்கிறான். அவளை மட்டுமல்லாது இன்னும் இரண்டு கொலைகளையும் செய்ததாக சொல்லும்போது கதையில் பரபரப்பு எகிறுகிறது.
எதற்காக அந்த கொலைகள் என்பதை அலசி ஆராய்கிறபோது அதிரவைக்கும் சம்பவமொன்று நடந்ததை இடைவேளைக்குப் பின் காண்பித்து இதுதான் குற்றம் புதிது’ என்று கதையை முடிக்கிறார் இயக்குநர் நோவா ஆர்ம்ஸ்ட்ராங்க்.
நாயகன் தருண் விஜய் நடிப்புக்கு புதியவர். மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போன்ற முகபாவத்துடன் செய்த கொலைகள் பற்றி விளக்கும்போது கவனம் ஈர்க்கிறார். கொலை செய்த உடலை துண்டு போடுவதில் காட்டும் வெறித்தனம், காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதம் என மற்ற காட்சிகளில் ஓகே ரக நடிப்பைத் தந்திருக்கிறார்.
நாயகி ஜேஷ்விதா கனிமொழி, தன்மீது நடந்த பாலியல் அத்துமீறலுக்கு பழிவாங்கும் விதமாக நடந்துகொண்ட காதலனுடன் இணைந்து குற்றச் சம்பவத்தை மறைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் காட்டும் பரபரப்பான உடல்மொழியால் கவனம் ஈர்க்கிறார்.
பாலியல் வன்முறைக்குத் தேவையான வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிற ராம்ஸ், போலீஸ் உயரதிகாரியாக வருகிற மதுசூதன் காட்டியிருக்கிற கம்பீரம், மற்றவர்கள் வழங்கியிருக்கிற கச்சிதமான நடிப்பு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.
ஜேஷன் வில்லியம்ஸ் நேர்த்தியான ஒளிப்பதிவால் படத்தை தரம் உயர்த்த, பின்னணி இசையால் காட்சிகளை விறுவிறுப்பாக்க முயற்சித்திருக்கிறார் கரண் பி கிருபா.
இயக்குநர் நோவா ஆர்ம்ஸ்ட்ராங்க் இடைவேளை வரை உருவாக்கிய எதிர்பார்ப்பை அதன் பிறகான காட்சிகளில் தக்க வைக்க முடியாமல் தடுமாறியிருப்பதால், குற்றம் புதிது வழக்கமான கிரைம் கதைகளில் ஒன்றாக ஓடி முடிகிறது.
Rating 3 / 5

