பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியமான ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (ஜனவரி 18; 2025) சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துக்கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இயக்குநர் முகேஷ் குமார் சிங், “‘கண்ணப்பா’ படக்குழுவினர் அனைவரும் கடவுள் சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக நான் கடவுள் சிவனால் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். அதனால், தான் என் முதல் படத்திலேயே இந்திய திரையுலகின் முன்னணி கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கண்ணப்பா பிரமாண்டமான திரை காவியம் மட்டும் அல்ல தற்போதைய தலைமுறையினர் அறிந்துக் கொள்ள வேண்டிய வரலாறு. நிச்சயம் படம் மக்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
நடிகர் விஷ்ணு மஞ்சு, “15 வருடங்களுக்கு முன்பு நான் நடிகனாக கரியரை தொடங்கினேன். அன்று முதல் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இன்று சிவன் அருளால் என் ஆசை நிறைவேறியிருக்கிறது, அதுவும் கண்ணப்பா மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது.
15 வருடங்களுக்கு முன்பு இருந்தே சரத்குமார் அங்கிளுடன் படம் பண்ண வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்ட்டு இருந்தேன், இப்போது அது நடந்திருக்கிறது. என் அப்பா மீது உள்ள மரியாதை காரணமாக தான் அவர் நடித்தார்.
பிரபுதேவா அண்ணா, அவர் என் அப்பாவை அண்ணா என்று அழைப்பார், நான் அவரை அண்ணா என்று அழைக்கிறேன். நான் சிறு வயதில் அவரது வீட்டுக்கு சென்று நடனம் கூட கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவாக தான் இருக்கும். அவர் நடன இயக்குநராக பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் கேட்டுக்கொண்டதற்காக அவர் எங்கள் படத்தில் பணியாற்றினார். இரண்டு முறை நியூசிலாந்துக்கு அவர் வந்தார். படம் பார்த்தால் உங்களுக்கே புரியும், நான் பிரபு அண்ணா தான் நடனம் அமைக்க வேண்டும், என்று முடிவு செய்தேன் என்று.
இயக்குநர் முகேஷ் சார், படம் இயக்குவது இது தான் முதல் முறை. அவர் நிறைய டிவி தொடர்கள் இயக்கியிருக்கிறார். நான் பல முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறேன், முகேஷ் சார் உடனான என் உறவு ரொம்பவே ஸ்பெஷல். நான் படம் தொடர்பாக குழப்பமாக இருக்கும் போது, எனக்கு பெரும் உதவியாக இருந்தார். படத்தொகுப்பாளர் ஆண்டனி, ’காக்க காக்க’ படம் பார்த்தது முதல் அவருடைய ரசிகனாகி விட்டேன். அவர் ஒரு வாரத்தில் முழு படத்தையும் எடிட் செய்துவிடுவார், ஆனால் என் படத்தை ஒரு வருடமாக எடிட் செய்து கொண்டிருக்கிறார்.
கேமரா மேன் சித்தார்த், என் சகோதரர். அவர் எனக்காக இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தியை நாங்கள் தான் அறிமுகப்படுத்த இருந்தோம், ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அறிமுகமாகி விட்டார். அவர் சிறப்பாக நடித்திருக்கிறார், நிச்சயம் பெரிய நடிகையாக வருவார். கண்ணப்பா பற்றி அனைவருக்கும் தெரிந்தது தான், நாங்கள் அதிகம் கஷ்ட்டப்பட்டிருக்கிறோம், அனைவரும் கஷ்ட்டப்பட்டு தான் படம் எடுக்கிறார்கள். கண்ணப்பா நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும், எங்களுக்கு உங்கள் ஆதரவு வேண்டும்” என்றார்.
நாயகி ப்ரீத்தி முகுந்தன், “அனைவருக்கும் வணக்கம், புது வருடத்தில் உங்களை தான் முதல் முறையாக சந்திக்கிறேன், அதுவும் ‘கண்ணப்பா’ போன்ற பிரமாண்டமான படத்திற்காக சந்திப்பது மகிழ்ச்சி. இவ்வளவு பெரிய படத்தில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்காக நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கிறேன். விஷ்ணு சார், மோகன் பாபு சார், இயக்குநருக்கு நன்றி. இந்த குழு ஒரு குடும்பம் போல் இருந்தது, என்னை ரொம்ப நன்றாக பார்த்துக் கொண்டார்கள். இந்த படம் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் நடிப்பதற்காக தான் திரையுலகிற்கு வந்தேன், ஆனால் இந்த படத்தில் பணியாற்றும் போது, ஒரு காட்சிக்காக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள், ஒரு காட்சியை கூட்டு முயற்சியின் மூலம் எப்படி அழகாக கொண்டு வருகிறார்கள், என்பதை பார்த்து எனக்கு பிலிம் மேக்கிங் மீது பேஷன் வந்துவிட்டது. இந்த படத்தில் கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. உண்மையாகவே படக்குழுவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களது பெரும் முயற்சியினால் படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், “பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்த காலக்கட்ட தலைமுறைக்கு சரித்திரம், இதிகாசங்களை நினைவுப்படுத்த வேண்டும், கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம், அதைப் பற்றி நிச்சயம் நாம் மக்களுக்கு சொல்ல வேண்டும், என்று இயக்குநர் சொன்னார். அது தான் இந்த படத்திற்கும், தற்போதைய தலைமுறையினருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். மோகன் பாபு சார், விஷ்ணு இருவருக்கும் வாழ்த்துகள், இந்த படத்தை உருவாக்கியதற்கு. கடுமையாக உழைத்திருக்கிறார்கள், உண்மையாக, நேர்மையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களது உண்மையான உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்க வேண்டும், என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
சிவன் மீது பக்தி இருக்கிறதோ, இல்லையோ அவரைப் பற்றிய படத்தில் மிகவும் பயபக்தியுடன் ஒட்டுமொத்த படக்குழுவும் பணியாற்றினார்கள். என்னை பொறுத்தவரை பிரமாண்டம் ஒரு பக்கம், நடித்தவர்கள் அனைவரும் முன்னணி கலைஞர்கள். அக்ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், மோகன் பாபு சார் என பெரிய பெரிய நட்சத்திரங்கள் இருக்கும் படம். அதே சமயம், பெரிய நட்சத்திரங்களுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை, அந்த அந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். இயக்குநர் முகேஷ் குமார் சிங் பிரமாண்டமாக படத்தை எடுத்திருக்கிறார். அவருக்கு இந்தி, ஆங்கிலம் தெரிகிறது, ஆனால் தெலுங்கு திரைப்படத்தை, பான் இந்தியா அளவில் கொண்டு செல்வதற்கான நுணுக்கங்களுடன் இந்த படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். முன்னணி கலைஞர்களுடன் பணியாற்றியது பெருமை என்கிறார், அவருடன் பணியாற்றியதை நானும் பெருமையாக கருதுகிறேன்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி, பிரபு தேவா ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அழகாக இருக்கிறார், இங்கேயும் அழகாக இருக்கிறார். மோகன் பாபு சார், விஷ்ணு அதிகமாக மெனக்கெட்டிருக்கிறார்கள். பிரபு தேவாவின் நடனக் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. மிக சிறப்பான படம், உணர்வோடு அனைவரும் நடித்திருக்கிறோம். படத்தை போல் வெற்றியும் பிரமாண்டமாக அமைய வேண்டும், என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.
பிரபு தேவா பேசுகையில், “இந்த படத்திற்காக மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறேன். மூன்று பாடல்களிலும் நடனம் பெரிதாக இருக்காது, ஆனால் எமோஷனல் இருக்கும். அதேபோல் கிளைமாக்ஸ் பாடல் மிகவும் முக்கியமானது, அதில் நடனத்தை விட எமோஷனலை கொண்டு வர வேண்டும் என்பது சவாலாக இருந்தது, அதனால் பணியாற்றவும் ஆர்வமாகவும் இருந்தது. இயக்குநர் முகேஷ் குமார் சிங் என்றதும், அவர் இந்தி அவருக்கு எப்படி நமது கலாச்சாரம் தெரியும், என்று நான் யோசித்தேன். ஆனால், அவருக்கு சிவனைப் பற்றி நிறைய தெரிந்திருக்கிறது. எங்க அனைவரையும் விட அவருக்கு தான் அதிகம் தெரிந்திருக்கிறது. இந்த படத்தை இயக்குவதற்கு அவர் தான் சரியான நபர், சிறந்த இயக்குநர். அமெரிக்கன் ஒளிப்பதிவாளர் பணியாற்றியிருக்கிறார். அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். விஷ்ணு எனக்கு தம்பி போல, மோகன் பாபு சார் எனக்கு பெரிய அண்ணன். அவருக்கு என் வாழ்த்துகள்” என்றார்.