இயக்குநர் ஹரி கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றிப் படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருபவர். அவர் டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட குட்லக் ஸ்டுடியோஸை கடந்த வருடம் தொடங்கினார்.
கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 5.1 மிக்ஸிங் மற்றும் டப்பிங் வசதி கொண்ட புதிய ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி தொடங்கினார்.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் திரையுலகத்திற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்று கூறிய இயக்குநர் ஹரி, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையே, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் ‘ரத்னம்’ திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். பிரியா பவானிஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாகியுள்ளது என்கிறார் ஹரி. ‘ரத்னம்’ வரும் ஏப்ரல் 26 அன்றுதிரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

