காதல், காமம், கொலை என கதம்பமான கதையில் உருவான ‘எனை சுடும் பனி.’
அபர்ணாவும் வெற்றியும் காதலர்கள். இருவருக்குமிடையில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் உருவாக, அபர்ணா அதை காரணமாக்கி காதலை முறித்துக் கொள்ள நினைக்கிறார். தன் அப்பாவிடம் தனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கச் சொல்கிறார். அந்த சந்தர்ப்பமாக பார்த்து அபர்ணா காணாமல் போக, வெற்றிதான் கடத்தியிருக்க வேண்டும் என அபர்ணாவின் வீட்டார், வெற்றியின் பெற்றோரிடம் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே அந்த ஊரில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்க, கொலைகாரனை பிடிப்பதற்கான பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அபர்ணா காணாமல் போன தகவலும் சேர்ந்துகொள்ள போலீஸார் வெற்றிதான் அந்த கொலைகாரன் என சந்தேகப்பட கதை சூடுபிடிக்கிறது.
உண்மையில் பெண்களைக் கடத்திக் கொலை செய்வது யார்? கொலைகளுக்கான காரணம் என்ன? அபர்ணாவுக்கு என்னவானது? என்பதெல்லாம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருகிற அடுத்தடுத்த காட்சிகள்…
காதலனிடம் இருக்கிற தவறுகளைத் திருத்தும் நோக்கத்தில் பிரேக் அப் முடிவெடுப்பது, காமவெறியனின் பிடியிலிருந்து தப்பிக்க அதிரடியாக செயல்படுவது என துடிப்பாக நடித்து, டூயட் பாடலில் கொஞ்சம் கவர்ச்சியும் காட்டிப் போகிறார் அபர்ணாவாக வருகிற உபாசனா.
சற்றே கனமான உடல்வாகு, லட்சணமான தோற்றம் என்றிருக்கிற நாயகன் நட்ராஜ் சுந்தராஜ் காதலி காணாமல் போன நிலையில் செய்யாத குற்றத்துக்காக போலீஸிடம் அடிபடும்போது அய்யோ பாவம் என்றிருக்கிறது. முகபாவங்களில் உணர்வுகளை பிரதிபலிப்பதில் இன்னும் கொஞ்சம் தேர்ச்சி தேவைப்பட்டாலும், போலீஸ் தேடும் குற்றவாளியை அலைந்து திரிந்து கண்டுபிடிக்கும் காட்சிகளில் தனக்குள்ளிருக்கும் காதலின் ஆழம் வெளிப்படும் விதத்தில் நடித்திருப்பதில் குறையில்லை.
காமவெறியும் கொலைவெறியும் கலந்து செய்த கலவையாக தனேஷ் தந்திருக்கும் வில்லத்தனத்திற்கு பாஸ்மார்க் போடலாம்.
போகிற போக்கில் லேசாக கலகலப்பூட்ட கூல் சுரேஷ் வந்து போகிறார். சிங்கம் புலியின் காமெடி பங்களிப்பும் கதையில் இணைந்திருக்கிறது.
மகளை இழந்த அப்பா வேடத்தில் உணர்ச்சிபூர்வமாக நடித்திருக்கிறார் தலைவாசல் விஜய்.
மனோபாலா, சித்ரா லெஷ்மணன், ஸ்ரீலேகா என அனைவரின் நடிப்பும் கச்சிதம்.
இடைவேளைக்கு முன்வரை அடிக்கடி எட்டிப் பார்க்கும் பாடல்கள் மனதுக்கு இதமும் உற்சாகமும் தருவதாக இருந்தாலும், சீரியஸான கதைக்கு அவை அவசியமில்லையே என்ற உணர்வையும் தருகின்றன.
பல காட்சிகளில் வெளிச்சம் பதுங்கிகொண்டிருப்பதாலோ என்னவோ ஒளிப்பதிவு ஓகே ரகமாகவே தோன்றுகிறது.
நம் மாநிலத்தில் இதுவரை நடந்த பாலியல் குற்றச் சம்பவங்களை நினைத்துப் பார்த்தால் பொள்ளாச்சியில் நடந்தவை மனதை உலுக்க்கும். அந்த பொள்ளாச்சியை கதை நிகழ்விடமாக கொண்டு, அதே பாலியல் குற்றப் பின்னணியில் பகீர் திகீர் சம்பவங்களின் தொகுப்பாக படத்தை உருவாக்கியிருக்கிற இயக்குநர் ராம் சேவா,
‘பொது இடங்களில் பேச்சு வாக்கிலோ, போன் மூலமோ மொபைல் எண்களை பரிமாறிக் கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும்’, ‘சோஷியல் மீடியா மூலம் நண்பர்களாக மாறுகிறவர்களை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது’என வழங்கியிருக்கும் அறிவுரைகள் அனைவரின் மனதிலும் அழுத்தமாக பதிய வேண்டியது.
எனை சுடும் பனி _ சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் எச்சரிக்கை மணி!