அட்டகாசமான திரில்லராக மாறுபட்ட கதைக்களத்தில் சசீந்திரா கே. சங்கர் இயக்கியுள்ள ‘அகமொழி விழிகள்’ வரும் மே மாதம் 9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் சசீந்திரா கே. சங்கர், ”நான் மலையாளி ஆனால் என் பாட்டி தமிழ் தான். என் வேர் தமிழ் தான். மலையாளம் கன்னடம் தெலுங்கு எல்லாம் தமிழில் இருந்து வந்த மொழிகள் தான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மொழி. இந்த படத்தை உங்கள் கையில் கொடுத்து விட்டோம் வாழ வையுங்கள். என்னை இயக்குநராக்கியது தமிழ் தான். நான் இங்கு தான் பல ஆண்டுகளாக வேலை பார்த்தேன். இந்த மொழி வாழ வைக்கும் என நம்பிக்கையில் தான் இருக்கிறேன். அகமொழி விழிகள் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி” என்றார்.
நாயகன் ஆதம் ஹசன், ”இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள திரை பிரபலங்களுக்கு நன்றி. இந்த படம் 2,3 ஆண்டுகளாக எடுத்தோம். நான் கத்தாரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன், இங்கு வந்து போகும் இடைவேளையில் தான் இந்தப்படம் எடுத்தார் இயக்குநர். இயக்குநர் மிக கண்டிப்பாக இருப்பார், ஒவ்வொரு டயலாக்கும் சரியாக வரும் வரை விட மாட்டார். ஒரு லாங் டயலாக் ஷாட் எடுக்கும் போது பல டேக் போனது, எனக்கே நம்பிக்கை போய்விட்டது. என்னை மாற்றிவிடுவார் என நினைத்தேன் ஆனால் மறுநாள் முதல் ஷாட்டில் ஓகே ஆனது அப்போது தான் நம்பிக்கை வந்தது. படம் நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவையும் தாருங்கள்” என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன், ”கேரளா நண்பர்கள் இந்தப்பட விழாவிற்கு அழைத்தார்கள். மலையாள பட டப்பிங் என நினைத்துத் தான் வந்தேன். ஆனால் மிக அழகான தமிழ்ப் படமாகச் செய்துள்ளார்கள். அவ்வளவு அழகாக எடுத்துள்ளார்கள். டிரெய்லர், மூணு பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் பேரரசு, ”அகமொழி விழிகள் பெயரே மிக அழகாக உள்ளது. பாடல் விஷுவல்ஸ் எல்லாமே நன்றாக இருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் அசத்தியுள்ளார்கள். விஷுவல் பார்க்க பெயிண்டிங் மாதிரி உள்ளது. அத்தனை உழைத்துள்ளார்கள். இது மாதிரி படம் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நிகழ்வில் நாயகி நேஹா ரத்னாகரன், தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார், சிறு முதலீட்டு தயாரிப்பாளர் ஆர் கே அன்பழகன், தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மங்கை ராஜன், தமிழ் நாடு திரையரங்கு சங்க செயலாளர் திருச்சி ஶ்ரீதர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.