முதலமைச்சருக்காக கொலைகள் செய்து கொண்டிருக்கும் கூலிப்படைக் கும்பலில் ஈழ விடுதலைப் போராளியொருவன் அடைக்கலம் கேட்டு ஒட்டிக் கொள்கிறான். முதலமைச்சருக்காக அவனும் கொலை செய்கிறான்.
நாட்கள் போகப்போக, அந்த கும்பலை ஒட்டுமொத்தமாக போட்டுத்தள்ள முதலமைச்சர் ஆட்களை களமிறக்க போராளி என்ன செய்கிறான் என்பது மீதிக்கதை… தன்னிடம் கூலிப்படையாக இருப்பவர்களை ஒழிக்க முதலமைச்சர் திட்டமிடுவது ஏன்? ஈழப் போராளி கூலிப்படையில் இணைந்தது ஏன்? என்பதற்கான பதில்கள் விறுவிறுப்பான திரைக்கதையில் கலந்து கடக்கிறது.
ஈழப் போராளியாக ஆர்யா. முறுக்கேறிய உடற்கட்டு போராளி கேரக்டருக்கு பக்காவாக பொருந்துகிறது. கொடூரமான தாக்கப்பட்டு வீழ்வதாகட்டும், கொடூர தாக்குதலில் எதிரிகளை வேட்டையாடுவதாகட்டும் நடிப்பில் வெறித்தனம் தெரிகிறது. இலங்கை ராணுவ அதிகாரியால் கண் முன்னே தங்கை கற்பழிக்கபடும் சூழ்நிலையில் எதுவும் செய்ய முடியாமல் கதறும்போது நமக்கு கண் கலங்குகிறது.
பதவிக்காக யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற எண்ணம் கொண்டவராக சாதுவான முகத்தை வைத்துக் கொண்டு கம்பீரம் காட்டியிருக்கிறார் முதலமைச்சராக வருகிற விஜயராகவன்.
சுனில் முதலமைச்சரின் அடிமை போலிருந்து அவருக்காக குற்றச் செயல்களில் ஈடுபடுபவராக மிரட்ட,
கூலிப்படை தலைமையாக இந்திரன்ஸ், அவரது கூட்டாளிகளாக முரளி கோபி, தேவ் மோகன், சரத் அப்பானி, கூட்டாளிகளில் ஒருவரின் காதலியாக நிகிலா விமல் என ஏராளமான நடிகர் நடிகைகளை கச்சிதமான நடிப்பில் பார்க்க முடிகிறது.
அத்யூத் குமாரும் அவரது மகளாக ரெஜினா கஸான்ட்ராவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாத்திரங்களில் வந்து கெத்தாக நடித்து விட்டுப் போகிறார்கள்.
அஜனிஷ் லோக்நாத்தின் அதிரடியான பின்னணி இசையும், 90களின் காலக்கட்டத்தை நேர்த்தியாக பதிவு செய்திருக்கும் எஸ் யுவாவின் ஒளிப்பதிவும் பலம்.
ஈழ மண்ணில் தமிழர்கள் சந்தித்த அடக்குமுறைகளை, வலிகளை ஆரம்பத்தில் காண்பித்திருக்கும் இயக்குநர் ஜீயென் கிருஷ்ணகுமார் தமிழர்களை துரோகிகள் என்பது போலவும் கட்டமைத்திருக்கிறார்.
மேக்கிங்கில் அசத்தும் இந்த படம் வன்முறைப் படங்களை விரும்புவோருக்கு நல்ல சாய்ஸ்.
Rating 2.5 / 5

