இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.
சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க களமிறங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேஸ்ட்ரோ (சிபிராஜ்) கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது படத்தின் கதை.
அந்த கொலையை யார் செய்தது என்பதை மட்டுமல்லாமல், காணாமல் போன ஒரு பெண், பேருந்தில் துன்புறுத்தப்படும் பெண் என அவர் கவனத்துக்கு வந்த மற்ற விவகாரங்களின் பின்னணியையும் அவர் துப்பு துலக்குவதால் திரைக்கதை விறுவிறுப்படைகிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்துக்கு உயரத்தாலும் உடற்கட்டாலும் பொருத்தமாக இருக்கிற சிபிராஜ் நல்ல பொருத்தம். ஒரு துரும்பு கிடைத்தாலும் அதை வைத்து அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்கிற மூளைக்காரராக தன் பங்களிப்பை பக்காவாக செய்திருக்கிறார். தான் புத்துணர்ச்சி அடைவதற்காக அவர் அடிக்கடி விபூதிப் பட்டை அடித்துக் கொள்ளும்போது கதை விறுவிறுப்படைகிறது.
வாய்ஸ் ஓவரில் படத்தை துவங்கி வைக்கிற கஜராஜுக்கு, மன்னருடன் போருக்கு புறப்படுகிற தளபதி போல் சிபிராஜுக்கு பக்கபலமாக இருக்கிற பொறுப்பு. அதை சரியாக செய்திருக்கிறார்.
அநியாயத்தை தட்டிக் கேட்க துணிந்ததால் குத்துப்பட்டு சாகிற ராஜ் அய்யப்பா, தேர்தலில் ஜெயிப்பதற்காக எதையும் செய்யத் துணிகிற அரசியல்வாதியாக திலீபன், பேருந்தில் பயணித்து போலீஸ் விசாரணைக்கு ஆளாகிறவர்கள் என மற்றவர்கள் கதையின் தேவையை பூர்த்தி செய்திருக்கிறார்கள்.
வேகமாய் ஓடும் பேருந்துக்குள் நடக்கும் கதைக்கு வந்தே பாரத் வேகத்தில் பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் கே எஸ் சுந்தரமூர்த்தி.
இரவில் நடக்கும் சம்பவங்களுக்கும் திரில்லராய் பரபரக்கும் திரைக்கதைக்கும் ஏற்ற ஒளிப்பதிவை தந்துள்ளார் ஜெய் கார்த்திக்.
கொலை நடந்த பேருந்தில் பயணித்தவர்களை திரட்டி வைத்து நடத்தப்படும் விசாரணையில் யார் யார் மீதெல்லாமோ சந்தேகப்பட வைத்து, எந்த விதத்திலும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸை உருவாக்கி, பத்து மணி நேர கதையை சத்தான படைப்பாக தரம் உயர்த்தியிருக்கிறார் இயக்குநர் இளையராஜா களியபெருமாள்.

