அரசியலில்வாதியின் பிள்ளைகள் இருவர் பள்ளிப் படிப்பைத் தொடர்கிற காலகட்டத்தில் அங்கு நடக்கும் மாணவர் தலைவர் தேர்தலை சந்திக்கிறார்கள். இருவரில் அண்ணன் போட்டியில் பங்கேற்க, அண்ணன் ஜெயிக்கக்கூடாது என தம்பி காய் நகர்த்த, அண்ணன் புத்திசாலித்தனமாக வேறொரு முடிவெடுக்க தேர்தல் களம் சூடுபிடிக்கிறது.வென்றது யார், வீழ்ந்தது யார் என்பது கதையின் மீதி…
மனைவி, துணைவி என இரண்டு ஜோடிகள் யோகிபாபுவுக்கு. அதில் ஒருவரான மஸ்காரா அஸ்மிதாவுடன் ஜாலியாக ஆட்டமெல்லாம் போட்டிருக்கிறார்.
யோகிபாபு சார்ந்திருக்கும் கட்சியின் தலைவராக வருகிற சீனியர் காமெடியன் செந்தில் கலகலப்புக்கு கொஞ்சமாகவும் கருத்து சொல்ல அதிகமாகவும் பயன்பட்டிருக்கிறார்.
யோகிபாவுவின் மகன்களாக இமயவரம்பன், அத்வைத், அரசியல் எதிரியாக சுப்பு பஞ்சு, ஸ்கூல் ஹெச் எம் மாக சித்ரா லெஷ்மணன் என மற்றவர்களின் நடிப்பில் குறையில்லை.
ஒளிப்பதிவு கச்சிதம். பாடல்களும் பின்னணி இசையும் பெரிதாய் ஈர்க்கவில்லை.
பள்ளியில் நடக்கும் தேர்தலில் அரசியல்வாதியின் மகன்கள் பங்கேற்றால் அவர்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள், எப்படியெல்லாம் அரசியல் செய்வார்கள் என்பதை மையப்படுத்திய கதைக்களம் சுவாரஸ்யம்தான். அதிலும் அண்ணன் தம்பிகளே களமிறங்குவது என்பது கூடுதல் சுவாரஸ்யம். அதிலும் அந்த இருவரும் ஒரே அப்பாவுக்கும் வெவ்வேறு அம்மாக்களுக்கும் பிறந்தவர்கள் என்றால் கலாட்டா களேபரங்களுக்கு கேட்கவா வேண்டும்?
இப்படி நாம் எதிர்பார்க்கும் எல்லாமும் படத்தில் இருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் பாஸ்மார்க் மட்டும்தான் போட முடியும்.
நமது பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் அதற்கான அவசியம் என்ன என்பதையும் ஏற்கும்படி எடுத்துச் சொல்லியிருக்கும் இயக்குநர் சங்கர் தயாள் திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

