அமானுஷ்ய சம்பவங்களின் அணிவகுப்பில் நிஜமாகவே வித்தியாசமாக கதையில் உருவாகியிருக்கும் படம்.
கிராமமொன்றில் லீலா என்ற இளம்பெண் தூக்கில் தொங்கி உயிரை விடுகிறாள்.
லீலாவின் தந்தை, தான் ஏதோவொரு கோபத்தில் திட்டியதால் வார்த்தை தாங்காமல் போய்ச் சேர்ந்து விட்டாள் என்று சொல்லி அழுகிறார்.
‘நான் திறக்கக்கூடாது என்று சொன்ன அறையைத் திறந்ததால்தான் இந்த அசம்பாவிதம்’ என்கிறார் பாட்டி.
இப்படி ஆளாளுக்கு ஒன்றை சொல்லிக் கொண்டிருக்க, ஆக வேண்டியதை பார்ப்போம் என மற்றவர்கள் தயாராகிறார்கள். இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் முடிந்து, சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்காக சடலத்தை தூக்க முன்வந்தவர்களுக்கு அதிர்ச்சி. சடலம் பெரியளவில் கனம் கூடியிருக்க அசைக்கக்கூட முடியாமல் திணறுகிறார்கள். லீலா படுக்க வைக்கப்பட்டிருக்கும் கட்டிலை ஏகப்பட்ட பேர் சேர்ந்து கயிறு கட்டி இழுக்கிறார்கள். ஆனாலும் லீலா நகரவேயில்லை.
அப்படி நகராத லீலா, தன் மரணத்துக்கு காரணமானவர்களை ஒவ்வொருவராக அடையாளம் காட்டத் தொடங்குகிறாள். அவர்கள் யார் யார், லீலாவின் மரணத்தில் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது அடுத்தடுத்த காட்சிகளில்…
லீலாவாக நடித்திருக்கும் ரூபா கொடுவாயூர், பிணமாக கிடந்தாலும் புன்னகை மாறாமல் வசீகரிக்கிறார். காதல் உணர்வை, கோபத்தை, இயலாமையை வெளிப்படுத்தும்போது முகபாவங்களால் அசத்துகிறார்.
லீலாவை காதலித்ததற்காக யார் யாரிடமெல்லாமோ அடிபடும் நிலைக்கு தள்ளப்படுகிற நாகேந்திர பிரசாத்தை பார்க்கும்போது ‘ஐயோ பாவம்’ என்றிருக்கிறது. காதலியை இழந்து கதறும்போது நல்ல நடிப்பு தெரிகிறது.
லீலாவின் அம்மாவாக வருகிற கீதா கைலாசம் தாய்ப்பாச உணர்வை சரியான சமயத்தில் சரியான விகிதத்தில் காட்சிகளில் கலந்திருக்க, லீலாவின் அப்பா, அண்ணன், அண்ணி, ஊர் மக்கள் உள்ளிட்ட மற்றவர்கள் கதைக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
திகிலும் திரில்லுமாய் மாறி மாறி கடக்கும் திரைக்கதையின் போக்கிற்கேற்ப மிரட்டலான பின்னணி இசையைத் தந்து,
ஒப்பாரிக்கு ஒன்று, காதலர்கள் உற்சாகமாய் பொழுதைக் கழிக்கும்போது இன்னொன்று என பாடல்களை ரசிக்கும் விதத்தில் இணைத்திருக்கிறார் ஜெசின் ஜார்ஜ்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் என மற்ற துறையினர் கச்சிதமாக பணியாற்றி படத்தை தரம் உயர்த்தியிருக்கிறார்கள்.
தன் மரணத்திலுள்ள மர்மங்களை ஊர் மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல் சுடுகாட்டுக்கு கிளம்ப மாட்டேன் என ஒரு பெண்ணின் சடலம் பிடிவாதம் பிடிக்கும் வித்தியாசமான கதையை, எளிய பொருட்செலவில் உருவாக்கியிருக்கிற இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் விமர்சகர்களின், ரசிகர்களின் பாராட்டுக்களில் மூழ்க தன்னையும் தன் குழுவினரையும் தயார்படுத்திக் கொள்ளலாம்.