ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை கையிலெடுக்கும் போலீஸ் தரப்புக்கு சிலர் மீது சந்தேகம் வர, விசாரணை தீவிரமாகிறது. பெண்ணுடைய பின்னணி, கொலைக்கு முன் அவள் கற்பழிக்கப்பட்டது, குற்றவாளி யார் என்பதெல்லாம் தெரிய வருகிறது. அத்தோடு முடிந்தது என நினைத்தால் இன்னும் சிலரும் சிக்குகிறார்கள். அதைப் பார்க்கும்போது ‘அடப்பாவிகளா நீங்களுமாடா?’ என ஆத்திரம் கொப்பளிப்பதை தவிர்க்க முடியவில்லை.
பெண்ணின் சடலம் கட்டுமானப் பணி நடக்கும் கட்டடத்தின் கான்கிரீட் பில்லருக்குள்ளிருந்து எடுக்கப்படும்போதே கதையில் பரபரப்பு பற்றிக் கொள்கிறது. அப்போது தொடங்கி அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமைகள் ஒவ்வொன்றாக தெரியவர அதிர்ச்சியின் தாக்கம் அதிகரிக்கிறது. அதை கிளைமாக்ஸ் வரை குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா.
போலீஸ் உடையில் அத்தனை கம்பீர,மாக இருக்கிறார் ரக்சிதா. குற்றவாளிகளை கண்டறிவதில் காட்டும் சுறுசுறுப்பு, தண்டிப்பதில் காட்டும் ஆக்ரோஷம் ஏற்ற வேடத்துக்கேற்ற ஆளுமை அத்தனையும் கச்சிதம்.
ராஜ்குமார் நாகராஜ் இன்ஸ்பெக்டராக வருகிறார். தவறு செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற வெறியைக் கண்களில் காட்டுபவர், குற்றவாளிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கும் விதம் கதையின் விறுவிறுப்புக்கு பெரியளவில் உதவியிருக்கிறது.
எளிய குடும்பத்துப் பெண்ணாக அபி நட்சத்திரா. அம்மாவுக்குப் பதிலாக வேலை செய்யப் போன இடத்தில் மாடர்ன் உடைக்கு பழக்கப்படுத்தப்பட்டு, காமவெறியர்களால் பலாத்தாரம் செய்யப்பட்டு, சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டு என தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் வெகுளித் தனம், பயம், மிரட்சி, பரிதாபம் என பொருத்தமான முகபாவம் காட்டியிருக்கிறார்.
படு கவர்ச்சியாக உடையணிந்து தன்னைச் சுற்றியுள்ள ஆண்களை தன் பக்கம் ஈர்க்கும் அம்ரிதா ஹல்டர், தன்னைப் போலவே தன் வீட்டுக்கு வேலைக்கு வந்த அபி நட்சத்திராவை மாற்ற முயற்சிக்கிறார். விபரீதங்கள் ந்டந்தபின் வருந்துகிறார்.
அம்ரிதாவை காதலித்து அவ்வப்போது உடலால் நெருங்கி உற்சாகமாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் ஆனந்த் நாக், ஆர்வக் கோளாறால் ஒருசில விஷயங்களைச் செய்து போலீஸில் மாட்டும்போது ‘உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்’ என்ற ஃபீலிங் வருகிறது. அந்தளவுக்கு அவர் கேரக்டரின் தன்மையை புரிந்து நடித்திருக்க, வில்லனாக வருகிற சிவம் உட்பட மற்ற நடிகர் நடிகைகளும் அதை கடைபிடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் கதையின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கின்றன.
உடையணிவதில் பெண்கள் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் சில நேரங்களில் அவர்களுக்கு எமனாக மாறலாம் என எச்சரித்திருக்கிற இந்த எக்ஸ்ட்ரீமில், கதை புதிதாக இல்லாவிட்டாலும் திரைக்கதையிலிருக்கும் வேகம் ஆடியன்ஸை திருப்தி படுத்தும்.

