தமிழ் சினிமா ஆர்வலர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைப்பதற்காக சென்னையை தலைமையிடமாக கொண்டு விட்பா (World International Tamil Film Association – WITFA) என்கிற சர்வதேச அளவிலான அமைப்பு தொடங்கப்பட்டு, அதன் முதல் மாநாடு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
நிகழ்வில், விட்ஃபா அமைப்பின் தேசிய கீத பாடல் மற்றும் விட்ஃபா மூலம் தயாரிக்கப்படும் ’Expired மருந்து’ என்ற முதல் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது
விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விட்ஃபா அமைப்பின் சர்வதேச தலைவரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ரஷீம் பேசியபோது, “நான் தெய்வத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளவன். எவ்வளவு பெரிய விசயமாக இருந்தாலும் நடக்கும், தெய்வம் துணை இருக்கும், என்ற நம்பிக்கையில் அதில் ஈடுபடுவேன், அந்த வகையில் தான் சர்வதேச அளவிலான இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறேன்.
ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், அது நடக்கும், நடக்காது, என்று எல்லாம் நான் யோசிக்கவில்லை, ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும், என்று தான் நினைத்தேன். அது நடக்கவில்லை என்றாலும், ரஜினிகாந்தின் அண்ணனை வைத்து இன்று படம் எடுத்திருக்கிறேன். யார் படத்திலும் நடிக்காத ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா இன்று என் படத்தில் நடித்திருக்கிறார். தெய்வத்தின் அருளால் தான் அவர் என் படத்தில் நடித்திருக்கிறார்.
இன்றைய விட்ஃபா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கங்கை அமரன் சார் எவ்வளவு பெரிய மனிதர், அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது கடவுளின் அருள் தான். இயக்குநர் பேரரசுக்கு தெரியாமல் அவரது பழனி படத்தில் ஆறு நாட்கள் பயணித்திருக்கிறேன், அதனால் அவர் என்னுடைய குருநாதர். இயக்குநர் சங்க தலைவராக இருக்கும் ஆர்.வி.உதயகுமார் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர். சிறு முதலீட்டு படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கே.ராஜன் சார், ஆகியோரை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
’மாம்பழம் திருடி’ என் ஆறாவது படம், நான் இயக்கும் ஏழாவது படம், விட்ஃபா தயாரிக்கும் முதல் படமாகும். இதில், இலங்கையில் பிரபலமாக இருக்கும் ஒருவரை அறிமுகப்படுத்த இருக்கிறோம். விட்ஃபா தயாரிக்கும் அனைத்து படங்களையும் நான் மட்டுமே இயக்க மாட்டேன். விட்ஃபா ஒவ்வொரு வருடமும் இரண்டு படங்களை தயாரிப்பதோடு, பத்து படங்களை வெளியிட போகிறது. ஆக, ஆண்டுக்கு 12 படங்கள் விட்ஃபா மூலம் வெளிவரும். இதன் மூலம், இரண்டு தயாரிப்பாளர்கள், இரண்டு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல புதுமுகங்களை உருவாக்கப் போகிறோம்.
நாங்கள் ஒரு கூட்டமைப்பாக இருந்து திரையுலகிற்கான பணியை மேற்கொள்ளப் போகிறோம். இதுவரை எங்கள் அமைப்பில் 11 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 40 பேர் அமைப்பின் முக்கிய நிர்வாகத்திலும், 150 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். சாதாரன உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் பேன்ஸ் கிளப் உறுப்பினர்களாக லட்சக்கணக்கானோர் இணைய உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், சுமார் 1000 பேர் என 50 ஆயிரம் பேர் விட்ஃபா’வில் இணைய இருக்கிறார்கள்.
விட்ஃபாவில் உள்ள உறுப்பினர்களுக்கு, நாங்கள் வெளியிடும் படங்களை பார்க்க 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இன்று ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டுமானால் எவ்வளவு கட்டணம் என்பது தெரியும். அதில் 50 சதவீதம் சலுகை என்றால் உங்கள் செலவு எவ்வளவு குறையும் என்று பாருங்கள். இதே, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஒரு டிக்கெட்டின் விலை சுமார் ரூ.500க்கு விற்கப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் உங்களுக்கு 50 சதவீத கட்டணம் சலுகை இருந்தால், உங்கள் செலவு பாதியாக குறையும். நாங்கள் சாதாரண படங்களை வெளியிட மாட்டோம். அதேபோல் தயாரிப்பதிலும் நல்ல கதைகளை கேட்டு தான் தயாரிப்போம், அதற்கான குழுவும் எங்களிடம் இருக்கிறார்கள்.
விட்ஃபாவின் வெளியிடம் முதல் திரைப்படமான ‘மாம்பழ திருடி’ படத்தில் ரஜினிகாந்தின் பெயர் வரப்போகிறது. அவரது அண்ணன் நடித்திருப்பதால், ரஜினிகாந்தின் பெயர் நிச்சயம் வரும். இப்படி தான் எங்களது ஒவ்வொரு படங்களையும் திட்டமிட்டு தயாரிப்பதோடு, படங்களை வெளியிடவும் செய்வோம்.
எங்களுடைய அமைப்பின் கொளை மற்றும் சட்டத்திட்டங்கள் மிக நேர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமைப்பை உருவாக்கிய என்னை கூட வெளியேற்றும் வகையில் இதன் சட்டதிட்டங்கள் உள்ளது. தலைவர், செயலாளர் என முக்கிய நிர்வாகிகள் தவறு செய்தால், மற்ற நிர்வாகிகள் செயற்குழுவை கூட்டி, அவர்களை வெளியேற்றும் அளவுக்கு இதன் கட்டுப்பாடுகளை உருவாக்கியிருக்கிறோம். இப்படி ஒரு வலுவான அமைப்பில் சேர சிறு கட்டணம் உள்ளது, அது வெறும் ரூ.200 மட்டுமே.
என் அப்பா சமூக சேவகர், ஒரு மிகப்பெரிய கல்லூரியின் தலைவராக இருந்தார், பொதுநல அமைப்புகள் பலவற்றின் தலைவராகவும் இருந்தார். அவர் சொன்னது, “நீ இறந்தால் 40 பேர் அழ வேண்டும்” என்பது தான். அதனால், தான் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினரை விட உயர்ந்த பதவியில் இருந்த நான் அந்த வேலையை விட்டுவிட்டு திரைத்துறைக்கு வந்தேன், இந்த துறையின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்ய முடியும், என்ற நம்பிக்கையில் இந்த துறைக்கு வந்திருக்கிறேன். இன்று சொல்கிறேன், விட்ஃபாவின் இரண்டாவது மாநாடு நேரு ஸ்டேடியத்தில் நடக்கும், செயற்குழு உறுப்பினர்கள் 150 பேரின் வீட்டில் ஒரு கார் இருக்கும். இதற்கான பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். உலகம் முழுவதும் இருக்கும் இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருக்கிறார்கள், அவர்களை எல்லாம் சந்தித்து எங்கள் அமைப்பு பற்றி எடுத்துச் சொல்ல இருக்கிறோம். எனவே, விட்ஃபா மூலம் தமிழ் திரையுலகிற்கு மட்டும் அல்ல சினிமா மீது ஆர்வம் உள்ள சாமானியர்கள் அனைவருக்கும் உதவி செய்யப் போகிறோம்.” என்றார்.
இசையமைப்பாளர் கங்கை அமரன், “விட்ஃபா அமைப்பை பற்றி கேட்ட போது இது மிகவும் சிறப்பான அமைப்பாக இருக்கிறது. ஒரு கதையை உயிராக நினைத்து சுமப்பவர்களை தேடி பிடித்து வாய்ப்பு கொடுக்க வேண்டும், அப்படிப்பட்ட கதைகளை தயாரித்தால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம். இப்போது வருகின்ற படங்களில் வன்முறை அதிகம் இருக்கிறது. கமலே அப்படிப்பட்ட படங்களுக்கு சென்று விட்டார். அதற்கு காரணம் மக்கள் தான், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, எதை விரும்புகிறார்களோ அதை நோக்கியே படம் இயக்க தயாராகி விட்டோம். நம் வாழ்க்கையிலேயே நிறைய கதைகள் இருக்கிறது, அதை வைத்து படம் இயக்கினாலே வெற்றி பெற்று விடலாம்.
நான் இயக்கிய கரக்காட்டக்காரன் படத்தை பற்றி பாராட்டி பேசுகிறார்கள், தில்லானா மோகம்மாள் படத்தின் கருதான் கரக்காட்டக்காரன், இதை நான் சொன்னால் தான் உங்களுக்கு தெரியும், இல்லை என்றால் தெரியாது. இசையும் அப்படித்தான் நீங்கள் கொண்டாடுகின்ற பல பாடல்களுக்கு வேறு ஒரு பாடல் உதாரணமாக இருக்கும். இதை காபி என்று சொல்லக்கூடாது, பாதிப்பு என்று சொல்ல வேண்டும். இங்கு யாரும் எதையும் தெரிந்துக் கொண்டு வரவில்லை, அவர்களுக்கு அமைகின்ற சூழலுக்கு ஏற்றபடி, நம் முன்னோர்கள் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்.
விட்ஃபா அமைப்பின் செயல்கள் மிக சிறப்பானவையாக இருக்கிறது. நீங்கள் நல்ல கதையம் அம்சம் கொண்ட படங்களை தயாரித்தால், நாள் இளையராஜாவிடம் சொல்லி இலவசமாக இசையமைக்க சொல்வேன், அதேபோல் நானும் இலவசமாக பாடல் எழுதி கொடுக்கிறேன் விட்ஃபா மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்கள்.