ஆணாதிக்க சமூகத்தை எதிர்க்க நினைக்கும் பெண்ணை எத்தனை சாவல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது, எத்தனை துன்பங்களை தாங்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கும் படம்.
திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆனபின்னும் குழந்தை பிறக்காததால் மாமியாரின் கொடுமைக்கும், ஊராரின் தாறுமாறான பேச்சுக்களுக்கும் ஆளாகி மன உளைச்சலுக்குள் விழுகிற பெண், கணவருக்கும் மாமியாருக்கும் தெரியாமல் துணிச்சலான ஒரு செயலைச் செய்து குழந்தை பெற்றுக் கொள்கிறாள். ஏற்கனவே புயல் வீசிக் கொண்டிருந்த அவளது வாழ்வில் பூகம்பம் வெடிக்கிறது… அதிலிருந்து அவளால் மீள முடிந்ததா இல்லையா என்பதே கதை…
ஒரு உயிரை வயிற்றில் சுமக்கும் வாய்ப்பு கை கூடாததால் மலடி என்ற ஏச்சுப் பேச்சுக்களால் மனம் நொறுங்குகிற பாத்திரத்துக்கு முழுமையாக உயிர் தந்திருக்கிறார் கதையின் நாயகியாக இஸ்மத் பானு. பரிதாபத்தை உருவாக்கும் காட்சியாகட்டும், படுக்கையறை ரொமான்ஸாகட்டும் அத்தனையிலும் வெளுத்து வாங்கியிருக்கிறது அந்த கறுத்தப் பொண்ணு.
ஆணாதிக்க மனோபாவம், இயலாமை, குற்றவுணர்ச்சி, பாசப்பிணைப்பு என பல்வேறு உணர்வுகளை தன் நடிப்பில் கொண்டுவந்து ஏற்ற பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் படத்தின் நாயகன் திரவ்.
கொடுமைக்கார மாமியாராக வருகிற ரமா உடல்மொழியில் வன்மத்தையும் வசன உச்சரிப்பில் ஆவேசத்தையும் சரிவிகிதத்தில் காட்டியிருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கருக்கு அவ்வப்போது எட்டிப் பார்க்கிற எளிமையான பாத்திரம்தான் என்றாலும் தனது தேர்ந்த நடிப்பால் கவனிக்க வைக்கிறார். மற்றவர்களின் நடிப்பும் கச்சிதம்.
காட்சிகளோடு பொருந்திப் போகின்றன பாடல்கள்; காட்சிகளுக்கு தெம்பு சேர்க்கிறது பின்னணி இசை.
ஒளிப்பதிவில் மண்மணம் சூழ்ந்திருக்கிறது.
‘குழந்தையின்மை விஷயத்தில் ஆண்கள் மீது குறையிருந்தாலும் பெண்களை மட்டுமே துன்புறுத்துகிற நிலை இப்போதும் இருக்கத்தான் செய்கிறது’ என்கிற யதார்த்தத்தை உணர்வோடும் உயிரோட்டத்தோடும் பதிவு செய்திருக்கும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து பாராட்டுக்குரியவர்.
வெப்பம் குளிர் மழை – பாவப்பட்ட பெண்களின் உஷ்ணம்!