சமூக அக்கறை படைப்புகளின் வரிசையில் இணைகிற படம்.
போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள். அந்த வன்முறையை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து, உச்சபட்ச தண்டனை கொடுக்க சரவணனும் அவரது மகளும் திட்டமிடுகிறார்கள்.
இப்படி சூடுபிக்கும் கதையில் திட்டமிட்டபடி அவர்களால் குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க முடிந்ததா இல்லையா என்பதை நோக்கி கடந்தோடுகின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
மனைவியை இழந்து, மகளுடன் சென்னையில் குடியேறி, போஸ்டர் ஒட்டும் வேலையில் சேரும் வரை அப்பாவியாக வலம் வரும் பிரேம்ஜி, மகளுக்கு நேர்ந்த கொடுமை அறிந்தபின் மனம் கலங்கி, பழி தீர்க்க முடிவெடுக்கும்போது தேர்ந்த குணச்சித்திர நடிகராக வெளிப்பட்டிருக்கிறார்.
மகளாக வருகிற திவ்யதர்ஷினி பாலியல் பாதிப்புக்கு ஆளாகும்வரை வெகுளித்தனமாகவும், அதன் பின் அதற்கு காரணமானவனை கொல்ல வேண்டும் என கொந்தளிக்கும்போது வேறொரு பரிமாணத்திலும் நடிப்பு பங்களிப்பை வழங்கியிருக்கிறார். பரதநாட்டியம் ஆடும்போது பிரதிபலிக்கும் முகபாவங்களால் மனதைக் கவர்கிறார்.
காமவெறியனுக்கான வில்லத்தனத்தை எளிமையாக வெளிப்படுத்திருக்கிறார் ரஜத். பெட்ரோல் திருடனாக வருகிற இளைஞர் பரபரப்புக்கு உதவியிருக்க தீபா சங்கர், இயக்குநர் கருப்பையா முருகன் உள்ளிட்ட மற்றவர்கள் கதையின் தேவையை சரியாக பூர்த்தி செய்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகளாக, எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் எண்ணிக்கை என்ற அளவில் வந்து போகிறார்கள் வழக்கு எண் முத்துராமனும் சூப்பர் குட் சுப்ரமணியும்.
ஜி கே வி இசையில் இயக்குநர் வெங்கட் பிரபு பாடியிருக்கும் மகளே என் மகளே பாடல் மனதை உருக்குகிறது. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் கச்சிதம்.
நாடகத்தனமான சில காட்சிகள் படத்தின் பலவீனம். அதையெல்லாம் தாண்டி, குழந்தைகள் தொடங்கி பாட்டிகள் வரை பாலியல் பலாத்தாரத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ‘நம் பிள்ளைகளுக்கு யார் மூலமாக வேண்டுமானாலும் பாலியல் பாதிப்பு நேரலாம்’ என்பதை எடுத்துச் சொல்லி, ‘எல்லோரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வைத் தந்திருக்கும் இயக்குநர் கருப்பையா முருகன் பாராட்டுக்குரியவர்.