நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களையும், விரைவில் வரவிருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தையும் இயக்கியுள்ள கோகுல் இயக்கவுள்ளார்.
படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகவிருக்கிறது.
கடந்த 2022-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘கட்டா குஸ்தி’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷாலின் ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் அடுத்த படம் இது. படத்திற்கு தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் புரடக்சன் நம்பர் 10′ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது முதல்கட்ட முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளது.
தற்போது விஷ்ணு விஷால் நடித்துவரும் படங்களின் பணிகள் முடிந்தும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கும். விரைவில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் தெரியவரும்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், ‘கட்டா குஸ்தி, ‘எஃப் ஐ ஆர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக ‘ஆர்யன்’ படமும் அதிக பொருட்செலவில், ஆக்சன் மற்றும் அசத்தலான பொழுது போக்குத் திரைப்படமாக உருவாகி வருகிறது.