‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைக்க, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வா வரலாம் வா.’
ரெடின் கிங்ஸ்லீ முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கிறார். தயாரிப்பாளர் எஸ்.பி.ஆருடன் இணைந்து எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ளார்.
‘மாசாணி’, ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’, ‘நான் அவளை சந்தித்தபோது’ ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நவம்பர் 15; 2023 அன்று சென்னையில் நடந்தது. படத்தின் நாயகன், நாயகி, ‘தேனிசைத் தென்றல்’ தேவா உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, சித்ரா லக்ஷமணன், வா.கௌதமன், மோகன். ஜி, தயாரிப்பாளர்கள் என்.விஜயமுரளி, சௌந்தர பாண்டியன், ஜே.எஸ்.கே.கோபி, வழக்கறிஞர் பாலு, சேலம் ஆர்.ஆர். தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படம் வரும் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
40 குழந்தைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக ‘மைம்’ கோபி நடித்துள்ளனர். அவர்களோடு சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, பயில்வான் ரங்கநாதன், ‘போண்டா’ மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், திலீபன், பிரபாகரன், யோகிசாமி, ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகர செயல்களையும் சாதாரணமாக செய்யத் தயாராகிறார்கள். விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில், 40 குழந்தைகளும் இரண்டு இளம் பெண்களும் பயணிக்கும் பேருந்தை கடத்தி பணம் பறிக்க திட்டம் வகுக்கின்றனர். திட்டத்தின் ஒரு திருப்பமாக காதல், பாசம், பரிவு ஏற்பட்டு நண்பர்கள் இளம்பெண்கள் மீது காதல் வயப்படுகிறார்கள். அந்த இளம் பெண்களை குறி வைக்கும் வில்லனின் சதித்திட்டத்தையும், காவல்துறை இவர்களைத் தேடுவதையும் அறிந்து நண்பர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள்? வில்லனுக்கும் நண்பர்களுக்கும் இடையேயான தொடர்பு என்ன? அந்த இளம் பெண்கள் யார்? அந்த 40 குழந்தைகள் யார்? பேருந்தை கடத்தும் ஐடியா எப்படி வந்தது? நண்பர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசை நிறைவேறியதா? அந்த நண்பர்களுக்கு இளம்பெண்களுடன் ஏற்பட்ட காதல் ஆசை நிறைவேறியதா? கொடூர செயல்களைச் செய்த வில்லன் என்ன ஆனான்? இப்படியான கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் பதில் சொல்லும் விதத்தில் திரைக்கதை அமைத்துள்ளார்கள்.
படத்தில் உற்சாகம் தரும்படியான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கானா எட்வின் எழுதிய ‘ஜிலுஜிலுன்னு ஏத்துறியே ஜிகர்தாண்டா போல, அந்த புயலப் போல பாயுறியே கபீலுன்னு என் மேல‘ என்ற கானா பாடலை தேவா பாடியிருக்கிறார். அந்த பாடல் பெரியளவில் ஹிட்டாகி புது சரித்திரம் படைக்கும் என உறுதியாய் சொல்கிறார்கள் படக்குழுவினர்.
படக்குழு:-
தயாரிப்பு: எஸ்.பி. ஆர்.
இயக்கம்: எல்.ஜி.ரவிசந்தர், எஸ்.பி.ஆர்.
கதை, திரைக்கதை, வசனம்: எல்.ஜி.ரவிசந்தர்
இசை: ‘தேனிசைத் தென்றல்’ தேவா
பாடல்கள்: காதல் மதி, கானா எட்வின், எஸ்.பி.ஆர்.
ஒளிப்பதிவு: கார்த்திக் ராஜா
எடிட்டிங்: ராஜா முகமது
நடனம்: நோபல்
சண்டைப் பயிற்சி: ‘இடிமின்னல்’ இளங்கோ
தயாரிப்பு மேற்பார்வை: ஆம்பூர் ஜெ. நேதாஜி
மக்கள் தொடர்பு: வெங்கட்