‘சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.
நிகழ்வில் பேசிய சீயான் விக்ரம், ”நான் படத்தைப் பற்றி பேசுவதை விட படம் உங்களிடம் நிறைய பேசும். நாங்கள் சொல்ல வேண்டிய விசயங்கள் அனைத்தும் படத்தில் இருக்கிறது. பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்.
‘சித்தா’ என்றொரு படத்தை பார்த்தேன். அந்தப் படத்தை பார்த்த பிறகு, இயக்குநர் அருண் குமார் என்று அழைத்ததை விட ‘சித்தா’ என்றுதான் அழைத்திருக்கிறேன். அந்த அளவிற்கு அந்தப் படம் என்னை பாதித்தது. ‘சித்தா’ சிறந்த படம். அவர் எந்த படத்தை இயக்கினாலும்.. அதை வித்தியாசமாக இயக்குகிறார். ‘சித்தா’ படத்தை பார்த்த பிறகு இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். அதுதான் வீரதீர சூரன்.
என்னுடைய ரசிகர்கள் நீண்ட நாட்களாக சீயான் விக்ரம் வேற மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று நானும் காத்திருந்தேன். அதற்காக முயற்சி செய்து கொண்டு தான் இருந்தேன். இயக்குநர் சொன்ன கரு எனக்கு பிடித்திருந்தது. அவருடைய ஸ்டைலும் எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம். ரசிகர்களுக்காக ரகளையான ஒரு படம் . ஆனால் ஒரு எமோஷனலான படம். ‘சேதுபதி’ மாதிரி இருக்க வேண்டும்… அதில் ‘சித்தா’ போன்றதொரு விசயம் இடம் பிடித்திருக்க வேண்டும் என நினைத்தேன். அந்த மாதிரி படம்தான் வீரதீர சூரன். ரசிகர்களுக்காக உருவாகி இருக்கும் திரைப்படம்” என்றார்.
இயக்குநர் எஸ். யூ. அருண் குமார், ”முதலில் இப்படத்தின் தயாரிப்பாளரான ஷிபு சார் மற்றும் ரியா ஷிபுவிற்கு நன்றி. இந்தப் படத்தில் இதயபூர்வமான மனிதர்களுடன் பணியாற்றினேன். நான் ‘தூள்’ திரைப்படத்தை மதுரை சிந்தாமணி திரையரங்கத்தில் பார்த்திருக்கிறேன். அவரை இயக்குவதற்கு கிடைத்த வாய்ப்பிற்காக ‘சீயான்’ விக்ரமுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் . ஆனால் இப்போதும் ஒரு காட்சியின் போது என்ன? எப்படி ?நடிக்க வேண்டும் என கேட்கிறார். ‘என்னப்பா செய்யணும்..?’ என்று அவர் கேட்பது என்னை பயமுறுத்தும். அதற்கு நான் முதலில் தயாராகி இருக்க வேண்டும். ஏற்கனவே விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி இருக்க வேண்டும். அந்த வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது.
அதே சிந்தாமணி திரையரங்கத்தில் ‘ நியூ ‘படம் பார்த்தேன். சூர்யா சார். ஐ லவ் யூ. நான் உங்கள் ரசிகன். என்னை நம்பி இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு நன்றி.
சுராஜ் சாரின் உழைப்பிற்கும் நான் மிகப்பெரிய ரசிகன்.
நான் இளையராஜாவின் பாடல்களை கேட்பேன். அதன் பிறகு ஜீவியின் பாடல்களை தான் அதிகமாக கேட்டிருக்கிறேன். அவருடைய மெலடி மனதில் புகுந்து இம்சிக்கும். இந்தப் படத்தின் மூன்று பாடல்களுக்கும்.. அவர் போட்ட முதல் ட்யூனே ஓகே ஆகிவிட்டது அத்துடன் இப்படத்திற்கு பின்னணி இசையை பார்த்து பிரமித்து விட்டேன். இதற்காக ஜீ. வி. பிரகாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
துஷாரா விஜயன், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்ச் 27ஆம் தேதி ‘வீரதீர சூரன்- பார்ட் 2’ வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.
நடிகை துஷாரா விஜயன், ”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய திரையுலக பயணத்தில் ‘ வீர தீர சூரன் ‘மிக முக்கியமான படமாக இருக்கும். இது போன்ற திறமையான நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியாது. எனக்கு கிடைத்திருக்கிறது.
இது எனக்கு மிகப்பெரிய மேடை என நினைக்கிறேன். விக்ரம் சார் நடித்த படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்கிறேன். சினிமாவுக்காக அவருடைய அர்ப்பணிப்பு என்பது போற்றத்தக்கது. அவருடைய உழைப்பு. அனைவருக்கும் மோட்டிவேஷனலாக இருக்கும்.
என் வாழ்க்கைக்கு ஒரு காதல் பாடலை அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஜீ.வி. பிரகாஷ் குமார். எஸ். ஜே. சூர்யாவுடன் நான் நடிக்கும் இரண்டாவது படம். இன்னும் நிறைய படங்களில் அவருடன் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார், ”சீயான் விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இது. ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தங்கலான் ‘, ‘வீரதீர சூரன்’ இந்த நான்கு படங்களும் அழுத்தமான கதையம்சம் உள்ள படங்கள். இந்த நான்கு படங்களும் அவருக்கும், எனக்கும் சவாலானதாக இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றும்போது சவாலாக இருக்கும் என்பதால் சந்தோஷத்துடன் பணியாற்றுவேன்.
இது ஒரு டார்க்கான பிலிம். இந்த படத்திற்காக ‘அசுரன்’ படத்தின் தொனியில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன். மிகவும் சவாலானதாக இருந்தது. ஒவ்வொரு மியூசிக்கல் ஸ்கோரும் மூன்று நிமிடம் நான்கு நிமிடம் என தொடர்ந்து இருக்கும். படம் பார்க்கும்போது இந்த பின்னணி இசை உங்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். படம் நிச்சயம் வெற்றி அடையும்” என்றார்.
நடிகர் எஸ். ஜே. சூர்யா, ”இந்தப் படம் ‘டிபிகல்’லான அருண்குமாருடைய படம். அருண்குமார் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ரசிகர். ஒரு ஆங்கில தரத்தில் தமிழ் மண்ணில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் படம். மிக அற்புதமான படம். படத்தில் நடிக்கும் போது மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தில் நீங்கள் புது எஸ் ஜே சூர்யாவை பார்ப்பீர்கள்.
சீயான் விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது. அவர் தமிழ் சினிமாவின் கௌரவம்” என்றார்.
நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஃபர்ஸ்ட் ஷாட்ல இருந்தே கதை ஆரம்பிச்சுடும். அதனால இந்த படம் பார்க்கும்போது அஞ்சு நிமிஷம் முன்னாடியே தியேட்டருக்கு வந்துடுங்க. டோன்ட் மிஸ் பர்ஸ்ட் ஷாட்” என்றார்.
நிகழ்வில் தயாரிப்பாளர் ரியா ஷிபு, பாடலாசிரியர் விவேக், நடிகர் பிருத்வி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.