பாலாவின் இயக்கத்தில், அருண்விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது.
கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொள்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குனராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். ஆக்சன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார்.
‘மாநாடு’ என்கிற பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை தொடர்ந்து வி ஹவுஸ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் என்பதுடன், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ஆறு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதாலும் இந்தப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
அதுமட்டுமல்ல, “படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. எனது திரையுலக பயணத்தில், ‘வணங்கான்’ ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை” என சமீபத்தில் நாயகன் அருண்விஜய் நெகிழ்ந்து போய் கூறியது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தவே செய்கிறது.