மெடிக்கல் கிரைம் சார்ந்த படங்களின் வரிசையில் ‘இப்படியெல்லாம்கூட நடக்குமா?’ என அதிரவைக்கும் கதையில் உருவான ‘ட்ராமா.’
விவேக் பிரசன்னா – சாந்தினி தம்பதி கல்யாணமாகி நான்கு வருடங்கள் கடந்தபின்னும் குழந்தை பிறக்காத கவலையில் இருக்கிறார்கள்.
இளம்பெண் பூர்ணிமா தன் காதலனுடன் அத்துமீறிப் பழகி தாய்மையடைந்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த பூர்ணிமாவின் பெற்றோர் கருவை கலைக்கச் சொல்கிறார்கள். பூர்ணிமா, ‘கலைக்க மாட்டேன்’ என உறுதியாகச் சொல்கிறார்.
விவேக் பிரசன்னா – சாந்தினி தம்பதி தங்கள் குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக அந்த ஊரிலுள்ள கருத்தரித்தல் சிகிச்சை மையத்தை அணுகுகிறார்கள். அந்த மையத்துக்கும் பூர்ணிமாவின் காதலனுக்கும் ஒருவித தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பால் விவேக் பிரசன்னா – சாந்தினி தம்பதி பெரியளவில் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.
அவர்கள் அப்படி என்ன அச்சுறுத்தலை சந்திக்கிறார்கள்? பூர்ணிமாவின் காதலனுக்கும் அந்த மையத்துக்கும் என்ன தொடர்பு? கருவை கலைக்கும் விஷயத்தில் பூர்ணிமா என்ன முடிவுக்கு வந்தார்? இப்படியான பல கேள்விகளுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் பதில் தருகிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்.
குழந்தையில்லாத வேதனையை முகபாவங்களில் சரியாகப் பிரதிபலிக்கிற விவேக் பிரசன்னா _ சாந்தினி, கேவலமான வேலையைச் செய்தாலும் காதலை மதிக்கிற பிரதோஷ், காதலன் மாபெரும் குற்றவாளி என தெரிந்து நிலைகுலைந்து போகிற பூர்ணிமா ரவி, தவறான வழியில் கர்ப்பமான மகளிடம் ஆத்திரத்தை கொட்டித் தீர்க்கும் பெற்றோராக மாரிமுத்து _ ரமா, நண்பனாகப் பழகி துரோகியாக மாறுகிற ஆனந்த் நாக், கருத்தரித்தல் சிகிச்சை என்ற பெயரில் லட்ச லட்சமாக பணம் சம்பாதிப்பதற்காக படு கேவலமாக செயல்படுகிற பிரதீப் விஜயன்… அத்தனை பேரின் நடிப்பும் கச்சிதம்.
பின்னணி இசை, ஒளிப்பதிவு உள்ளிட்டவை பட்ஜெட்டுக்கேற்ற தரம்.
குழந்தையின்மை பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் தம்பதியர் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறார்கள். பலனும் பெறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை இந்த சமூகம் ஒருவித சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்க இந்த படத்தின் சம்பவங்கள் வாய்ப்பு தரலாம். மற்றபடி எந்த தாக்கத்தையும் தர வாய்ப்பில்லை.
ட்ராமா _ அட ராமா!