கல்வி வியாபாரமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் சாமானிய மக்கள் தாங்கள் விரும்பிய கல்வியைப் பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கிற சூழலில், ஒரு காலத்தில் ஏழை எளிய மக்கள் பள்ளிக்கூடம் போவதே போராட்டமாக இருந்தது என்கிற கண்ணீரால் நனைந்த வரலாற்றின் ஒற்றைத் துளியாய் ஒரு படம்.
ஒரு கிராமம். அதில் 1950 காலகட்டத்தில் அண்ணாதுரை (பெயரை கவனியுங்கள்) என்பவர் ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்குகிறார். அந்த ஊரில் குறிப்பிட்ட ஒரு உயர்சாதிக் குடும்பத்துக்கு அடிமையாக இருக்கும் கீழ்சாதிக்காரர்களின் பிள்ளைகள் அந்த பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள்.
கீழ்சாதிக்காரர்கள் படித்து அறிவாளிகளாக மாறிவிட்டால் நம்மிடம் அடங்கி நடக்க மாட்டார்கள் என்று நினைக்கும் உயர் சாதிக் குடும்பம், சாமி அது இதுவென மக்களுக்கு பயம்காட்டி பள்ளிக்கூடத்தை இடிக்க நினைக்கிறது. அது முடியாமல் போகவே அண்ணாதுரையை இயங்கவிடாமல் முடக்குகிறது.
அண்ணாதுரை விட்ட இடத்திலிருந்து அவரது மகன் கல்விப் பணியைத் தொடர்கிறார். அப்போதும் பள்ளிக்கூடத்தை இடிக்க அந்த குடும்பம் களமிறங்கி, அதை செய்ய முடியாமல் பின்வாங்கி அதற்கு பதிலாக அவரை நடமாட விடாமல் செய்கிறது.
அவரையடுத்து அவரது மகன் (விமல்) கல்விப் பணியை கையிலெடுக்கிறார். அவரையும் முடக்க சதித் திட்டம் உருவாகிறது. அந்த திட்டத்தை ஞானத்தால் முறியடிக்க முடிந்ததா இல்லையா என்பதே சார்
பள்ளிக்கூடத்தை இடிக்க முயற்சிப்பவர்களை சுளுக்கெடுக்கும் காட்சிகளில் பொருத்தமான ஆத்திர ஆக்ரோஷம் காட்டும் விமல், சக ஆசிரியையை காதலிக்கும் தருணங்களில் ரசிக்க வைக்கிறார்.
கதை நாயகி சாயாதேவியின் அழகை அவரது விழிகள் பல மடங்கு கூட்டுகிறது. அப்படி கூடிய அழகுடன் விமலை காதலித்து, மனைவியாகி சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்கிற பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்.
விமலின் அப்பாவாக பருத்தி வீரன் சரவணன். எதிரிகளிடமிருந்து பள்ளிக்கூடத்தைக் கட்டிப் காப்பாற்றப் போராடும்போது அதற்கேற்ப கெத்து காட்டுபவர், ஒரு கட்டத்தில் எதிரிகளின் சாமர்த்தியமான தாக்குதலுக்கு ஆளாகி விரக்தியின் உச்சத்தை தொடும்போது பரிதாபத்தை சம்பாதிக்கிறார்.
பல வருட சாதிவெறிப் பகையை தீர்த்துக் கொள்ள, விமலுடன் நண்பனாக உறவாடும் சிராஜின் வில்லத்தனத்திற்கு பாஸ்மார்க் தட்டிவிடலாம்.
கீழ்சாதிக்காரர்கள் படிக்கக்கூடாது என்பதில் தானும் உறுதியாக இருந்து, தன் வாரிசுகளையும் அப்படியே உருவாக்கும் ஆடுகளம் ஜெயபாலனின் உடம்பை அலட்டிக்கொள்ளாத, களமிறங்கி சண்டை செய்யாத வில்லத்தனம் ஏற்கனவே சில படங்களில் பார்த்த உணர்வையே தருகிறது.
கவலைப்பட்டுக் கொண்டிருப்பது, அழுதுகொண்டிருப்பது, பதறிக் கொண்டிருப்பது என தான் நடிக்கும் படங்களில் செய்கிற வழக்கமான வேலையை இதிலும் செய்திருக்கிறார் விமலுக்கு அம்மாவாக வருகிற ரமா.
மற்றவர்கள் தங்கள் நடிப்பால் கதையின் தேவையை முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார்கள்.
திரைக்கதையை உள்வாங்கி பின்னணி இசையில் பிரதிபலித்திருக்கும் சித்துகுமார் ‘பனங்கருக்கா’ பாடலில் மனதை வருகிறார். மற்ற பாடல்களில் வெரைட்டி காட்டாதது ஏமாற்றம்.
படத்தில் கமர்ஷியல் வெற்றிக்கான அம்சங்கள் குறைவாக இருந்தாலும் 60, 70 வருடங்கள் முன், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்வியறிவைப் பெற முடியாமல் எப்படியெல்லாம் தடுக்கப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற வரலாற்றை வலியுடன் பதிவு செய்திருப்பதற்காக இயக்குநர் போஸ் வெங்கட்டை பாராட்டலாம்.
சார் – சப்ஜெக்ட் ஜோர், மேக்கிங் போர்!