சிறுவயதில் பார்த்துப் பழகிய பார்பரின் திறமையால் ஈர்க்கப்பட்டு, பிற்காலத்தின் தானும் அவரைப் போலவே தொழில் பழகி நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறாரன் கதையின் நாயகன்.
படிப்பையெல்லாம் முடித்தபின் வாலிபப் பருவத்தை தொட்டபின் விரும்பியபடி சீப்பையும் கத்திரிக்கோலையும் கைப்பிடித்து, ஐந்தாறு கோடி ரூபாயை சில வழிகளில் திரட்டிப் புரட்டி பிரமாண்டமான அதீ நவீன வசதிகளுடன் பார்பர் ஷாப் தொடங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்கிறான். திறப்பு விழாவை நடத்த முடியாதபடி பக்கத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு நொறுங்கி விழுந்து மண்ணோடு மண்ணாகிறது. கோடிக்கணக்கான செலவில் உருவான பார்பர் ஷாப்பை இடிக்க அரசு இயந்திரம் வந்து சேர்கிறது. பார்பார் ஷாப்பில் ஆயிரக்கணக்கான கிளிகள் சூழ்ந்து கொள்கிறது. இது படத்தின் பாதி கதை.
அதற்கெல்லாம் காரணம் என்ன? அந்த பிரச்சனைகளை அவனால் சமாளிக்க முடிந்ததா? விரும்பிய இலட்சியத்தை நெருங்க முடிந்ததா? இந்த கேள்விகளுக்கான பதில்களே மீதி கதை. இயக்கம் கோகுல்
பார்பர் ஷாப் தொடங்கும் கனவை மனதில் சுமந்து, அதை சாத்தியமாக்க சரியான முறையில் பயிற்சியெடுத்து, வேலைக்குச் சேர்ந்து திறமை காட்டி புகழ் பெற்று, சொந்தமாக பார்பர் ஷாப் தொடங்கி, அதில் தடைகள் ஏற்பட அதை சமாளிக்க முடியாமல் திணறி, தன்னைச் சுற்றிச் சூழ்ந்த குடிசைவாசிகளுக்கு உதவி செய்து, அவர்களின் வாரிசுகளை புகழ் வெளிச்சத்தில் நிறுத்தி என பலவற்றை எளிமையான நடிப்புப் பங்களிப்போடு செய்து முடிக்கிறார் ஆர் ஜே பாலாஜி.
பத்து பைசா செலவழிப்பதானாலும் பத்தாயிரம் முறை யோசிக்கிற கஞ்சப் பேர்வழி சத்யாராஜ் குடி போதையில் மருமகனிடம் மூன்று கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்து பல்பு வாங்குகிற காமெடி கலாட்டா
தனக்கு எதிராக வளர்பவனை முடக்க நினைப்பதில் தன் தெனாவட்டு ஸ்டைல் குறையாமல் மெல்லிய வில்லத்தனம் செய்திருக்கிறார் ஜான் விஜய்.
கதாநாயகி மீனாட்சி செளத்ரிக்கு பெரிதாய் வேலையில்லை என்றாலும் கணவனின் கனவுக்கு கனிவாய் துணை நின்று கவனம் ஈர்க்கிறார்.
ரோபோ சங்கரின் அச்சுப்பிச்சு காமெடியும் படத்தில் உண்டு.
சில நிமிடங்கள் ‘தரிசனம்’ தந்துபோகிறார் அரவிந்த் ‘சாமி.’
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜஸ்ட் வந்து போகிறார்.
மற்ற நடிகர், நடிகைகளும் பக்காவான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.
லட்சியத்தில் முன்னேற நினைப்பவனுக்கு பல விஷயங்களில் எதிர்ப்பு உருவாவதும், அதையெல்லாம் தகர்த்து அவன் விரும்பியதை அடைவதுமாய் பார்த்து பழகிய கதைக்களத்தில் பார்பர் ஷாப் கனவு என்பது சற்றே தனித்துவம்.
அந்த கதையில் சதுப்பு நில அத்துமீறல், மரங்களின் அழிவால் பரிதாப சூழ்நிலைக்குத் தள்ளப்படும் பறவைகள் என சமூக அக்கறையை அள்ளித் திணித்திருப்பதால் திரைக்கதைக்கு மூச்சு வாங்குகிறது!