வட சென்னையில் கதை நடப்பதாக இருந்தால் குடிகாரர்களின் அடாவடி, ரவுடிகளின் அராஜகம், தாதாக்கள் கடத்தல் கொலை என தாறுமாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவது, ஆளாளுக்கு பகையுணர்ச்சியுடன் வெட்டிக் கொண்டு சாவது என திரைக்கதையை ரத்தத்தால் குளிப்பாட்டாமல் விடுவதில்லை. காலாகாலமாக தொடர்கிற அதே ஸ்டைலில் மற்றுமொரு படைப்பாக ‘சாலா.’
வடசென்னை ராயபுரத்தில் குறிப்பிட்ட ஒரு மதுபானக் குடிப்பகத்தை அதாவது பாரை கைப்பற்ற இரு தரப்பினர் கொலைவெறியோடு மோதிக் கொள்கிறார்கள். அதில் பாரை கைப்பற்றுவதை லட்சியமாக கொண்டிருக்கிற தரப்பு பல இடங்களில் பார் நடத்துகிறது. இன்னொரு தரப்பு போலி மதுபான உற்பத்தியில் பலமாக இருக்கிறது. கதையின் நாயகன் பாரை கைப்பற்ற நினைப்பவரின் பாசத்துக்குரியவராய், அடியாளாய், விசுவாசியாய் இருக்கிறார். அந்த விசுவாசி நேசிக்கும் பெண் மது ஒழிப்புக்காக பொதுமக்கள் ஒத்துழைப்போடு போராடுகிறவர்.
‘அடடே, இது நல்லாயிருக்கே’ என்ற உணர்வைத் தருகிற இந்த கதையில் பார் யார் வசமானது? நாயகியின் மது ஒழிப்பு போராட்டத்திற்கு பலன் கிடைத்ததா? என்பது கிளைமாக்ஸ். இயக்கம் எஸ் டி மணிபால்
நாயகன் தீரனுக்கு முதல் படம். அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரம் பரந்து விரிந்த உடற்கட்டு என படத்தில் அவர் செய்யும் அதிரடி அடிதடிக்கு பொருத்தமாக இருக்கிறார். குறை சொல்ல முடியாத அளவுக்கு நடிக்கவும் வருகிறது.
ரேஷ்மா வெங்கடேஷ் ஆசிரியர் பணியிலிருந்தபடி மது ஒழிப்புப் போராளியாக களமாடும் வேலையை அதற்கான கம்பீரத்தோடு செய்திருக்க, பார் உரிமையாளராக அருள்தாஸ், ஹீரோவின் நண்பனாக ஸ்ரீநாத், வில்லனாக சார்லஸ் வினோத் என மற்றவர்கள் கதைக்கேற்ற தேர்வு.
ஸ்கூல் படிப்பின்போதே பீர் வாங்கி ருசி பார்க்கும் மூவர் கூட்டணி ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிக்க வைத்து பின்னர் அதிர்ச்சியான முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தீசனின் பின்னணி இசை படத்தை பரபரப்பாக நகர்த்த உதவியிருக்கிறது. ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு மிகமிக நேர்த்தி.
மதுவின் தீமையை எடுத்துச் சொல்வதற்காக வைத்திருக்கிற துளியும் எதிர்பாராத நிறைவுக் காட்சி மனதை ரணப்படுத்துவது உறுதி.
சாலா – போதை தூக்கலென்றாலும் காட்டிய பாதையில் தெளிவு அதிகம்!
Rating 3 / 5