இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதை, கிரி கிருஷ்ண கமல் இயக்கத்தில் ’சாரி’ என்ற திரைப்படமாக உருவாகியுள்ளது. படம் இந்த மாதம் 4-ம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.
முன்னதாக பிரமாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் ராம் கோபால் வர்மா, “சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவது வாழ்க்கையில் மோசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ’சாரி’. இந்தப் படத்திற்கான கதையை நான் எழுதியுள்ளேன். நான் எழுதிய ஸ்கிரிப்டை விட இயக்குநர் கிரி கிருஷ்ணா இந்தப் படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். இந்தப் படம் பற்றி நான் அவருடன் விவாதித்தபோது, அவர் சொல்லிய கருத்துகளும் எனக்குப் பிடித்திருந்ததால் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கினேன்.
ஒளிப்பதிவாளர் சபரி, இசையமைப்பாளர் சஷிப்ரீதம் மற்றும் எனது முழு அணியினரும் படத்தில் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சபரி தனது காட்சியமைப்புகள் மூலம் படத்தின் மையக்கருவை சரியாக பிரதிபலித்துள்ளார். இசையமைப்பாளர் சஷிப்ரீதமும் இந்தப் படத்திற்கு சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். சுபாஷ் படத்தில் மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். படக்குழுவினரின் பங்களிப்பு என்னை விட அதிகம் என்பது எனக்கு பெருமையான ஒன்று” என்றார்.
இயக்குநர் கிரி கிருஷ்ண கமல், “‘சாரி’ படத்திற்காக திறமையான புதிய குழு பணியாற்றியுள்ளது. ராம் கோபால் வர்மா எனக்கு படம் எப்படி உருவாக்குவது என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்கவில்லை. இது இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையிலான தீவிர கதைக்களத்தைக் கொண்டது. சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யா மற்றும் ஆராத்யாவின் கதாபாத்திரம் வழக்கமான படத்தில் வருவது போல இருக்காது. ஆர்ஜிவியுடன் பணிபுரிவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
கதாநாயகி ஆராத்யா தேவி, “‘சாரி’ படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த ராம் கோபால் வர்மாவுக்கு நன்றி. இந்தப் படம் என்னுடைய கனவு படம். இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் இந்தப் படத்தில் நடிக்க போதுமான சுதந்திரம் அளித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். சத்யா யது சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். படம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறோம். இந்த மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘சாரி’ படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.