நட்டி நட்ராஜ், நிஷாந்த் ரூசோ இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கும் ‘சீசா’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் குணா சுப்பிரமணியம், “எனக்கு கடவுள் பக்தி அதிகம். எதுவாக நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய், என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, இந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக நான் ஓடியிருக்கிறேன். என்னிடம் தீமை செயல்கள் அனைத்தும் இருந்தது, அதையெல்லாம் கடந்து இன்று இங்கு நிற்கிறேன். இதற்கு காரணமான சிவன் என் தயாரிப்பாளர், பார்வதியாக அவரது மனைவி சுகுணா மேடம், இவர்களால் தான் இங்கு நிற்கிறேன். தயாரிப்பாளரிடம் ஒரு நோயாளியாக தான் நான் அறிமுகம் ஆனேன். அப்போது அவர் என்னை விசாரித்த போது, என்னைப் பற்றி சொன்னேன். அப்போது அவர் சொன்னார், ஒரு நாள் நாம் பண்ணுவோம். அதில் இருந்து அவரை பின் தொடர்ந்தேன், நம்ம பண்ணலாம் என்று சொன்னார். அந்த நாளில் இருந்து என் வாழ்க்கை தொடங்கியது.
கதைப் பற்றி பேசும் போது, வெறும் பொழுதுபோக்கிற்கான படமாக மட்டும் அல்லாமல் சமூகத்திற்கு எதையாவது சொல்ல வேண்டும், என்றார். அதன்படி, அவரே ஒரு கதையும் சொன்னார். அந்த கதை மிக நன்றாக இருந்தது, நிச்சயம் சமூகத்திற்கு தேவையான ஒரு கதை. அதற்கு நான் திரைக்கதை அமைத்தேன். தயாரிப்பாளர் சாருக்கும், மேடமுக்கும் நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
அதேபோல், முகம் தெரியாத எனக்கு முகம் கொடுத்த எங்கள் தலைவன் நட்டி சார். நான் யாரிடமும் முறையாக உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. சில இயக்குநர்களிடம் பயணித்திருக்கிறேன், அவர்களின் படங்களில் சில வேலைகளை நானே செய்து பல விசயங்களை கற்றுக்கொண்டேன். நடிப்பதற்காக தான் நான் போனேன், அப்படி போய் தான் பல விசயங்களை அவர்களிடம் கற்றுக்கொண்டேன்.
அப்படி இருந்த என் மீது நம்பிக்கை வைத்து நட்டி சார் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். உலகத்தில் மோசமானவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், தேடினால் இந்த உலகத்தில் தங்கம், வைரம் கிடைக்கும். அப்படி தான் எனக்கு தங்கமாகவும், வைரமாகவும் கிடைத்தவர் நட்டி சார். அவரது கம்பீரம் எனக்கு பிடிக்கும். அவர் முன்பு எனக்கு பேச்சே வராது. இன்று அவருக்கு பெரிய பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது, அவரை வசதியாக வைத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர் எனக்காக இந்த படத்தில் நடிக்க வந்தார். என்னை டைரக்டரே என்று முதலில் அழைத்தவர் அவர் தான். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.
அவரை நான் சந்திப்பதற்கு முன்பு நல்ல நடிகராக தான் தெரியும், அவரை சந்தித்த பிறகு அவரை விட நல்ல மனிதர் இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள், என்று தோன்றியது. அந்த அளவுக்கு மிக சிறப்பானவர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாது. தம்பி நிஷாந்த் ரூசோ இளம் நடிகர். இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கான இடத்தையும் நட்டி சார் கொடுத்தார். அதற்கும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நிஷாந்த் ரூசோ நிச்சயம் பெரிய நடிகராக வருவார். நாயகி பாடினி குமார், சிறந்த நடிகை. கிளிசரின் கூட இல்லாமல் நடிக்க கூடிய நடிகை. அவங்க தமிழ் சினிமாவில் நல்ல நிலைக்கு வருவாங்க. மூர்த்தி, ஆர்.எஸ்.ரவி, தயாரிப்பாளர் ராஜநாயகம், ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள், இவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் மேடையில் இருக்கிறார்கள். கஸ்தூரி ராஜா சாரின், படங்களை பார்த்து நான் அழுவேன், அந்த அளவுக்கு அவரது படங்களில் இருக்கும் செண்டிமெண்ட் பிடிக்கும். நான் நேசித்த, நான் டாப் என்று நினைத்த இயக்குநர்களில் இருக்கும் கஸ்தூரி ராஜா சாரை வரவேற்கிறேன். விஜய் சாரை வைத்து பட்டய கிளப்பிய பேரரசு சாரை வரவேற்கிறேன். சிறிய படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கே.ராஜன் சாரை வரவேற்கிறேன். டிரெண்ட் மியூசிக் குழுவுக்கு நன்றி. என் படத்திற்கு தூணாக இருந்து என்னை இயக்கிய அக்கறை பாலு சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், “இந்த படத்திற்காக நான் இயக்குநர் குணாவை சந்தித்த போது, அவர் ஒன்றரை மணி நேரம் கதை சொன்னார். கதையில் அவர் மருத்துவம் சார்ந்த பல விசயங்களை மிக சரியாக கையாண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
எப்படி இந்த கதையை புடிச்சீங்க, என்று கேட்டேன். அப்போது தான் அவர் தயாரிப்பாளர் தான் கதை எழுதியதாக சொன்னார். அந்த கதையை அவ்வளவு சாதாரணமாக சொல்ல முடியாது, யோசிக்க முடியாது. பைபோல் டிசாடர் என்பது எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதை மிக சரியாக கதையில் கையாண்டிருக்கிறார்கள். இயக்குநர் குணா உடல்நிலை பாதிக்கப்படும் போது கூட மன சிதைவு எத்தகைய நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதை நான் உணர்ந்தேன். இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை இதுவரை யாரும் கையாண்டதில்லை.
சில படங்களில் லேசாக சொல்லியிருந்தாலும், இந்த படத்தில் அதை மிக சிறப்பாக முழுமையாக செய்திருக்கிறார்கள். செந்தில் வேலன் சார் வைத்திருக்கும் ஆறு கதைகளிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன். நான் பல படங்களில் போலீஸாக நடித்திருக்கிறேன், ஆனால் இந்த படத்தின் போலீஸ் வேடத்தை வித்தியாசமாக கையாண்டிருக்கிறார்கள், அதற்கு கதை எழுதியிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி.
இயக்குநர் குணா பல திறமைகள் கொண்டவர். அவர் ஒரு ஓவியர், கவிதை எழுதுவார், நடனம் ஆடுகிறார், அவர் நிச்சயம் நல்ல நிலைக்கு வருவார். என்னுடன் இணைந்து நடித்த ரூசோ சிறந்த நடிகர். அவர் நடித்த வேடம் எனக்கு கொடுத்திருந்தால் தெறித்து ஓடியிருப்பேன். அந்த அளவுக்கு கஷ்ட்டமான வேடம் அது, அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். நடிகை பாடினியுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை, ஆனால் அவரது காட்சிகளை பார்த்து மிரண்டு விட்டேன், ஒரே ஷாட்டில் அந்த காட்சிகளில் நடித்ததாக சொன்னார்கள், சிறப்பாக இருந்தது.
இந்த படத்தை வாழ்த்த வந்த கஸ்தூரி ராஜா சார், கே.ராஜன் சார், இயக்குநர் மைக்கேல், பேரரசு சார் ஆகியோருக்கு நன்றி. இசையமைப்பாளர் சிறப்பான பாடல்கள் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் பேசும் போது, தீபாவளி ஃபேண்ட் கேட்டால் பொங்கலுக்கு கொடுப்பதாக சொன்னார். ஆனால், இந்த கதையை புரிந்துக்கொண்டு இசையமைப்பது ரொம்ப கஷ்டம், அதற்கு காலதாமதம் நிச்சயம் ஆகும். சுகுணா மேடமுக்கு சினிமா புதிது என்றாலும் ஒரு வாரத்தில் அதை கற்றுக்கொண்டார். இங்கு என்ன நடக்கிறது, எப்படி கையாள வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றினார் அவருக்கு நன்றி.
யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் குணா படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது, நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நிஷாந்த் ரூசோ, “இயக்குநர் குணா சார் என்னை சந்தித்து இந்த கதையை சொல்லும் போது, நிச்சயம் என்னால் நடிக்க முடியாது, என்று சொன்னேன். அந்த அளவுக்கு என் கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஒரே கதாபாத்திரத்தில் மூன்று விதமான வித்தியாசங்களை காட்டி நடிக்க கூடியதாக இருந்தது. என்னை வைத்து காமெடி பண்ணிடாதீங்க சார், என்று சொன்னேன். இல்லங்க, நீங்க நடிச்ச படத்தை பார்த்திருக்கிறேன், நிச்சயம் உங்களால் நன்றாக செய்ய முடியும், என்று நம்பிக்கை கொடுத்தார். அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நான் நடித்தேன், அவருக்கு நன்றி. நன்றாக வந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். என்னுடன் நடித்த பாடினி, மூர்த்தி ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நட்டி சார் எனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தார், அவருக்கு நன்றி. படம் ஜனவரி 3 ஆம் தேதி வெளியாகிறது. நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் ஜே.செந்தில் வேலன், நடிகை பாடினி குமார், நடிகர் ஆதேஷ் பாலா, இசையமைப்பாளர் சரண் குமார், எடிட்டர் வில்சி ஜெ.சசி, இயக்குநர் மைக்கேல், இயக்குநர் அரவிந்தராஜ், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கஸ்தூரி ராஜா, கே.ராஜன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

