நடிகர் லிங்கா முக்கிய வேடத்தில் நடிக்க, அபாகஸ் கிரான்ட் மாஸ்டர் சரபேஷ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘சிற்பி.’
ஏ ஆர் புரொடக்சனஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் முத்துக்குமார், வினோத் சாகர், அரோல் சங்கர், பூமிகா ஷெட்டி, ரோஜா ஸ்ரீ, பாப்ரி கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் மூலக்கதை செந்தில் ஜெகன்நாதனின் எவ்வம் என்ற சிறுகதையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
திரைக்கதை எழுதி படத்தை சிவகணேஷ் இயக்கி வருகிறார். இவர் தமிழில் சிங்கபெண்ணே, போலீஸ் டயரி ஆகிய வெப் தொடர்களை ZEE5 சேனலுக்காக இயக்கியவர். இது மட்டுமில்லாமல் கன்னடத்தில் 8 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். கிச்சா சுதீப் தயாரித்த ஜிகர்தண்டா, ரவிச்சந்திரன் நடித்த ஆ திருஷ்யா திரைப்படத்தையும் இயக்கியவர் ஆவார். சென்னையை சேர்ந்த இவர் இசைக்கல்லூரி மாணவர் மற்றும் பல விளம்பர படங்களை இயக்கியவர். கர்நாடக மாநில திரைப்பட விருதுகளை பெற்ற தமிழரான இவர் இயக்கும் முதல் தமிழ் திரைப்படம் சிற்பி.
இந்த படத்திற்கு தர்மபிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் பாடல்கள் உருவாகி இருப்பது படத்திற்கு மிகபெரிய பலத்தினை சேர்த்து இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் சிவகுமார் மற்றும் கோதை நாயகி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் இல கேமராவை கையாண்டு இருக்கிறார். கலையை சுப்பு அழகப்பன் கவனிக்க, தேவராஜ் எடிட்டிங் செய்ய, சண்டைபயிற்சியை மிரட்டல் செல்வாவும், நடனத்தை பாப்பி மாஸ்டரும் அமைத்திருக்கிறார்கள்.

