இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் ஹைதராபாத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம்.
இந்தியா முழுவதும் பல்வேறு சமஸ்தானங்களாகப் பிரிந்து அவரவர் விருப்பத்துக்கு ஆட்சி செய்துகொண்டிருந்த மன்னர்கள், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபின் சுதந்திர இந்தியாவில் தங்களுடைய சமஸ்தானங்களை இணைத்தார்கள் என்பது அந்த நாட்களில் நடந்த வரலாற்றுச் சம்பவங்கள்.
அந்த காலகட்டத்தில் ஹைதராபாத்தை (இப்போதைய தெலுங்கானா )ஆண்டுகொண்டிருந்த நிஜாம் மன்னர் சுதந்திர இந்தியாவுடன் இணைய மறுக்கிறார். அது மட்டுமல்லாது ஹைதராபாத்தை தனி நாடாக குறிப்பாக இஸ்லாம் நாடாக மாற்ற வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அதன் முதற்கட்ட முயற்சியாக அவரது சமஸ்தானத்தில் வசிக்கிற இந்துக்களை இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்கிறார். அப்படி மாறாதவர்களை தன்னுடைய ரஸாக்கர் படையினர் மூலம் கொடூரமாக சித்தரவதை செய்ய உத்தரவிடுகிறார்.
ரஸாக்கர்கள் மன்னரின் சொல்லுக்கு கட்டுப்படாத மக்களை, மன்னருக்கு எதிராக போராடுகிற மக்களை, போராட்டத்தை முன்நின்று நடத்துகிற துணிச்சல் மிக்கவர்களை தாறுமாறாக வெட்டிக் கொல்கிறார்கள்; சுட்டுக் கொல்கிறார்கள். போராடுகிற பெண்களை ரஸாக்கர்கள் ‘இனி பிறக்கும் குழந்தைகள் இஸ்லாமியராக மட்டுமே இருக்க வேண்டும்’ என்ற நோக்கத்துடன் பாலியல் பலாத்காரம் கொள்கிறார்கள். அவர்கள் வளர்க்கும் பசுக்களையும், பச்சிளங் குழந்தைகளையும் கொன்று குவிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களை ஒரே மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு உயிர் பறிக்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் இப்படியொரு கொடுரம் நிகழ்வதைக் கண்டு கொதித்துப் போகிறார் இந்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல். நிஜாம் மன்னரை அடக்கி ஒடுக்கி, மக்களைப் பாதுகாத்து, ஹைதராபாத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க முயற்சிக்கிறார்.
அந்த முயற்சிகள், அதன் விளைவுகள், முடிவுகளை பதிவு செய்திருக்கிறது படத்தின் திரைக்கதை. இயக்கம் யதா சத்யநாராயணா
வல்லபாய் படேலாக, கொடுங்கோல் மன்னராக, ரஸாக்கர் குழுவின் தலைவராக, போராளிகளாக வருகிற அத்தனைப் பேரும் கதாபாத்திரங்களுக்கு மிகமிக பொருத்தமாக இருப்பதும், அந்தந்த பாத்திரங்களுக்கு மிகமிக பொருத்தமான நடிப்பைத் தந்திருப்பதும் படத்துக்கு பலமாக அமைந்திருக்கிறது.
போராட்டம், கத்தல், கதறல், ரத்தச் சகதி என்றிருக்கிற கதைக்களத்தை அதன் வலியும் உணர்வும் குறையாமல் கடத்த பின்னணி இசை பெரிதும் உதவியிருக்கிறது.
கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் இருவரின் பங்களிப்பில் அவர்களின் கடுமையான, நேர்த்தியான உழைப்பு தெரிகிறது.
படத்தின் பல காட்சிகள் உண்மையான வரலாற்றுக்கு சம்பந்தமில்லாததாக தோன்றுவதை தவிர்க்க இயலாதுதான். ‘இது உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படைப்பு’ என்பதை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால், படத்தின் உருவாக்கத்திலிருக்கிற உழைப்பு சற்றே ஆச்சரியம் தரலாம்!
ரஸாக்கர் – நிஜாமின் நிஜமுகம்!