பிழைப்புக்காக தமிழகத்தில் குவிந்துள்ள வட மாநில மக்களை சிலபல காரணங்களால் நம்மில் பலர் விரோதியாக கருதுகிற சூழலில், அப்படி கருதாமல் அவர்களையும் நம்மில் ஒருவராக நினைத்து அரவணைக்க வேண்டும் என எடுத்துச் சொல்லியிருக்கும் படம். ‘வடக்கன்’ என தலைப்பு வைக்கப்பட்டு, சென்ஸார் அனுமதி கிடைக்காததால் ‘ரயில்’ என தலைப்பு மாற்றப்பட்ட படைப்பு.
கணவன் வேலை வெட்டிக்கு போகாமல் எந்நேரமும் குடித்து போதையில் மிதப்பதால் வெறுப்பிலிருக்கும் மனைவி, பக்கத்து வீட்டில் வசிக்கும் வட மாநிலத்து இளைஞனிடம் நட்பாக பழகி வருகிறாள். அந்த பழக்கத்தை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கும் கணவன், தன் நண்பனின் ஆலோசனைப்படி வடக்கனை போட்டுத்தள்ள திட்டமிடுகிறான். அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே மீதிக்கதை. வடக்கன் சேமித்த 5 லட்சம் காணாது போவதில் கதையில் சற்றே சுறுசுறுப்பு தொற்றுகிறது…
கிரைம் திரில்லர் போலிருக்கிற இந்த கதையை எடுத்துக் கொண்டு, மனிதனை மனிதன் வெறுப்பது தவறு என கருத்து சொல்லும் விதத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாஸ்கர் சக்தி.
குடிகார கணவனாக வருகிற குங்குமராஜ், தனது பாத்திரத்துக்கேற்றபடி நன்றாகவே ந(கு)டித்திருக்க,.
அவருக்கு மனைவியாக வருகிற வைரமாலா வடக்கனை தம்பியாக நினைத்து பாசம் காட்டுவது, வடக்கன் இறந்தபின் சோகத்தில் மூழ்குவது என தன் பங்கிற்கான உணர்வுகளை சரியாக தந்திருக்க, வடக்கனாக வருகிற பர்வேஸ் மெஹ்ரூ அப்பாவித்தனம் காட்டி கவர்கிறார்.
எப்போது பார்த்தாலும் குடிப்பது, நண்பனையும் குடிக்க வைப்பது என்ற இரு வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார் ரமேஷ் வைத்யா. எலும்பும் தோலுமாக இருக்கிற அவரை, நிஜ குடி நோயாளி போலவே மாற்றியிருக்கிற ஒப்பனையாளரை பாராட்ட வேண்டும்.
வடக்கனின் சொந்த பந்தங்கள், பிரதான பாத்திரத்தை ஏற்றிருக்கிற வைரமாலாவின் தந்தையாக வருகிற செந்தில் கோச்சடை என மற்றவர்களின் நடிப்பு நிறைவு.
ஜனனியின் பின்னணி இசை கதையோட்டத்தின் தன்மைக்கேற்ப வளைந்து நெளிந்து காட்சிகளைத் தூக்கிப் பிடிக்க, பாடல்களில் இதம் கூடியிருக்கிறது.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவுக்கு ஸ்பெஷல் பாராட்டு.
‘வட மாநிலத்தவர்கள் உழைக்கிறார்கள்; நம்மவர்கள் பொறுப்பின்றிக் குடிக்கிறார்கள்’ என்று எடுத்துச் சொல்லியிருப்பதை (தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து ஏராளமானோர் மரணமடைந்த சூழ்நிலையில்) வேதனையோடு ஏற்கத்தான் வேண்டும்.
மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்ற கருத்து சரிதான் என்றாலும், வடக்கர்களை நம்மவர்கள் வெறுப்பதற்கான காரணங்களை அலசி ஆராயாமல் விட்டிருப்பது, கதையில் வடக்கன் இறந்தபின் நடக்கும் சம்பவங்கள் இயல்பாக இல்லாதிருப்பது ‘ரயில்’ பயணத்தின் இனிமையை குறைத்திருக்கிறது.
Rating 2.5 / 5