போலீஸ், ரவுடி மோதலை கதைக்கருவாக கொண்ட படம். சிவராஜ் குமார் நடித்து கன்னடத்தில் வெளிவந்து வரவேற்பு பெற்ற ‘தகரு’ படத்தின் ரீ மேக்.
பரபரப்பான சிட்டியில் கொலை செய்வது, பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பது என கெத்தாக திரியும் ரிஷி ரித்விக், செளந்தர்ராஜா, டேனியல் ஆனிபோப் கூட்டணியை வேட்டையாடும் முயற்சியில் இறங்குகிறார் போலீஸ் உயரதிகாரியான விக்ரம் பிரபு. அதனால் பெரிய இழப்பை சந்திக்கிறார். அதன்பிறகு அவரது நடவடிக்கைகளில் அதிரடி அதிகரிக்கிறது… இயக்கம் கார்த்தி
என்கவுன்டர் போலீஸாக விக்ரம் பிரபு. வில்லன்களோடு மோதும் ஆக்சன் காட்சிகளில் தேவைக்கேற்ப ஆவேசம் காட்டுபவர், தனது அறிமுகப் பாடலில் போட்டிருக்கும் ஆட்டத்தில் உற்சாகம் தெறிக்கிறது. கதாபாத்திரத்தில் தனித்துவம் இருந்திருந்தால் நடிப்புப் பங்களிப்பில் கூடுதலாய் கவனிக்க வைத்திருப்பார்.
ஹீரோவை காதலிக்கும் ஹீரோயின் என்ற சாதாரண கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா. அவரது அழகுப் புன்னகையும், கனிவுப் பார்வையும் ஈர்க்கிறது.
இன்னொரு நாயகியாய் வருகிற அனந்திகாவின் குழந்தைத் தனமும் குறும்புச் செய்கைகளும் ரசிக்க வைக்கிறது.
வில்லன்களாக வேலு பிரபாகரன், ரிஷி ரித்விக், செளந்தர்ராஜா, டேனியல் ஆனி போப் கூட்டணியின் வில்லத்தனம் பரவாயில்லை ரகம். செல்வா, ஜீவா ரவி, ஜார்ஜ் மரியான், ஹரீஷ் பெராடி என தேர்ந்த நடிகர்களும் படத்தில் உண்டு.
‘என் கண்ல இருந்தும் தப்பிக்க முடியாது, Gunல இருந்தும் தப்பிக்க முடியாது’ என வசனங்களை கவிதை பாணியில் தட்டி விட்டிருக்கிறார் இயக்குநர் முத்தையா.
ஹீரோவின் அறிமுகப் பாடல், மதுக்கூடத்தில் மற்றொரு பாடல், காதலுக்கு இன்னொன்று என வெரைட்டியாக அணிவகுக்கும் பாடல்களை தனது இசையால் ரசிக்க வைத்திருக்கும் சாம் சிஎஸ், ஆக்சன் காட்சிகளுக்கு ஆர்ப்பாட்டமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார்.
கதிரவனின் ஒளிப்பதிவு நேர்த்தி.
படம் முழுக்க முன்னும் பின்னுமாக நகர்ந்தோடும் காட்சிகள் சற்றே குழப்பம் தர, வந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்து அலுப்பும் தருகின்றன.
படம் முடிந்தபின், இயக்குநர் கார்த்தி ரீமேக் செய்ய வேறு ஏதேனும் தனித்த்துவமான படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

