‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கிய கே. பி. ஜெகன் இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்.’
இந்த படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது.
உண்மை சம்பவத்தை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ எனும் வெற்றி படத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான தொடக்க விழா மற்றும் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு கடந்த ஞாயிறன்று திருச்செந்தூர் அருகேயுள்ள சாஸ்தா கோவிலில் நடைபெற்றது.
நிகழ்வில் படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் கே. பி. ஜெகன், ”என்னுடைய வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் நான் கதையின் நாயகனாக நடிக்கிறேன். படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகும்” என்றார்.
படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.