ஆர்ஜே விஜய், அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹேமநாதன் முதன்முறையாக இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
கணவன், மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மோதல்கள்தான் படத்தின் கதைக்களம். பல கனவுகள் கொண்ட ஒருவன் குடும்பத்திற்காக தனது கனவுகளை தியாகம் செய்து, நல்ல கணவனாக வாழ்வில் வெற்றியடைவதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜே விஜய் சமீபத்தில் வெளியான சில படங்களில் ஹீரோவின் நண்பனாக வந்து கவனம் ஈர்த்ததை தொடர்ந்து, இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘டாணாக்காரன்’ உள்ளிட்ட படங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ், லல்லு, கதிர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, மார்ட்டின் இசையமைக்க, சிவசங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
தொடர்ந்து கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்து வரும் ‘ஒலிம்பியா மூவிஸ்’ எஸ். அம்பேத் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 8’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஒலிம்பியா மூவீஸ் அம்பேத்குமார் தயாரித்து வரும் படங்கள் தனித்துவமான கதைக்களங்களைக் கொண்டவை. அவை குடும்பப் பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த ஆண்டு ‘டாடா’ உள்ளிட்ட அற்புதமான பல பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறது.