அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் ‘பேச்சி’ படத்தில் பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், முரளி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சி கடந்த ஜூலை 23; 2024 அன்று சென்னையில் நடந்தது.
நிகழ்வில் படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன்.பி பேசியபோது, “’பேச்சி’ என்னுடைய முதல் படம். நண்பர்களால் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படம். 10 வருடங்களுக்கு முன்பு என் நண்பர் வசந்த் ஒரு பக்க கதையாக எழுதியதை தான் நான் ஒரு குறும்படமாக எடுத்தேன், இப்போது அது தான் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. வசந்தும் நானும் சேர்ந்து தான் இந்த கதையை எழுதியிருக்கிறோம்.
திகில் படம் என்பது ஒரே ஃபார்மெட்டில் தான் இருக்கும். எங்களது படத்தை நாங்கள் அப்படி…இப்படி…என்று சொல்லவில்லை. அதேபோல் நாங்கள் இந்த படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம், படத்தின் எந்த ஒரு காட்சியிலும் ரசிகர்கள் கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். படம் நிச்சயம் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். படத்தின் ஒலிவடிவமைப்பு, ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும். இரண்டு மணி நேரம் உங்களை புதிய உலகத்திற்கு படம் அழைத்து செல்லும் என்பது உறுதி” என்றார்.
நடிகர் பாலசரவணன், ”நான் காமெடி வேடம் மட்டுமின்றி அனைத்து விதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும், என்று ஆசைப்படுகிறேன். என் ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்த படத்தின் மாரி கதாபாத்திரம் இருக்கும். இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இது முழுக்க முழுக்க திகில் சஸ்பென்ஸ் படம். இப்படிப்பட்ட படங்கள் வருவதில்லை என்று ஏங்கும், ரசிகர்களுக்கு இந்த படம் செம படமாக இருக்கும்” என்றார்.
நடிகர் முரளி ராம், “‘மைனா’, ‘பீட்சா’ என இப்படி வெற்றி பெற்ற படங்களை திரும்ப பார்த்தோம் என்றால் அந்த படங்கள் அனைத்தும் நண்பர்கள் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக தான் இருக்கும். அந்த வரிசையில் ‘பேச்சி’ படமும் இடம் பிடிக்கும்” என்றார்.
நடிகர் ஜனா, “இது மிகவும் வித்தியாசமான ஒரு திகில் திரைப்படமாக இருக்கும். திரையரங்குகளில் பார்க்கும் போது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.
மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகனும், வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான சஞ்சய் சங்கர், “என் அப்பா எப்போதும் பத்திரிகையாளர்களிடம் மிக நெருக்கமாக இருப்பார், அவருக்கும் பத்திரிகையாளர்கள் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார்கள். அதுபோல் எங்கள் வெரூஸ் மற்றும் வெயிலோன் நிறுவனத்திற்கும், ‘பேச்சி’ படத்திற்கும் நீங்க சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். படத்தில் நிறைய ட்விஸ்ட்கள் இருக்கின்றன. அதேபோல், திகில் காட்சிகளும், ஒலி வடிவமைப்பும் மிரட்டலாக இருந்தது. படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அதனால் தான் இந்த படத்தின் மூலம் நாங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற நல்ல திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
நிகழ்வில் நடிகர் தேவ், தயாரிப்பாளர் கோகுல் பினாய், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின், வெரூஸ் நிறுவனத்தின் முஜீப் உள்ளிட்டோரும் பேசினார்கள்.
படக்குழு:-
இசை: ராஜேஷ் முருகேசன்
ஒளிப்பதிவு: பார்த்திபன்
படத்தொகுப்பு: இக்னேசியஸ் அஸ்வின்
கலை இயக்கம்: குமார் கங்கப்பன்
இணை தயாரிப்பு: விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர்

