ஈழத் தமிழர்கள் போரில் தோற்றாலும் அவர்களின் மனதிலிருக்கும் புரட்சித் தீ எப்போதும் அணையாது எனபதற்கு சான்றாக, அதே மண்ணில் வசிக்கும் ஒருவரின் வாக்குமூலமாக ‘ஒற்றை பனைமரம்.’
ஈழத்தில் நடந்த வாழ்வுரிமைப் போரில் உயிர் பிழைத்தவர்களில் சுந்தரம் என்ற நடுத்தர வயதுக்காரரும் கஸ்தூரி, அஜிதிகா என்ற இரு இளம் பெண்களும் இணைந்து வாழ்கிறார்கள்.
போர் முடிவுக்கு வந்த பின்னரும் தங்களைப் போன்றவர்கள் மீதான் சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அராஜகம் முடிவுக்கு வராததால், அவர்களை எதிர்க்க அமைப்பு ஒன்றைத் தொடங்க நினைக்கிறார் சுந்தரம். அவர் நினைத்ததை செய்ய முடிந்ததா என்பதே கதையின் மீதி… இயக்கம் புதியவன் ராசையா
படத்தின் இயக்குநரே சுந்தரம் என்ற கதையின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். போரில் மனைவியை இழந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாதவராக, எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல் அமைப்பு தொடங்குவதில் உறுதியாக இருப்பவராக தனது பாத்திரத்துக்குத் தேவையான கம்பீரத்தை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
கதையின் நாயகி கஸ்தூரியாக நவயுகா குகராஜன். தைரியமான போராளியாக அறிமுகக் காட்சியில் மனதைக் கவர்பவர், ராணுவ முகாமில் சிங்களனின் காமப்பசிக்கு இரையாகி மீண்டு வரும்போது அவரது நிலை கலங்கடிக்கிறது. வாழ்வதற்காக தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பதில் காட்டும் உறுதியாலும், தன்னை ஆசைநாயகியாக்கிக் கொள்ள விரும்புகிறவனிடம் காட்டும் கோபப் பாய்ச்சலாலும் கவனம் பெறுகிறார்.
குழந்தைகளைக் காப்பாற்ற வேறு வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பெண் என மற்றவர்கள் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து களமாடியிருக்க, பின்னணி இசை காட்சிகளுக்கு முடிந்தவரை பலம் சேர்த்துள்ளது.
ஈழத்தில் போருக்கு பின் தமிழர்கள் படுகிற கஷ்ட நஷ்டங்களை எடுத்துச் சொல்லியிருக்கும் இயக்குநர், தமிழர்களை சந்தர்ப்பத்துக்கேற்ப தடம் மாறி தடுமாறுபவர்களாகவும், துரோகிகளாகவும், இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் காட்டியிருப்பதை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும், அதுதான் உண்மை நிலை என அதே மண்ணில் வாழ்கிற இயக்குநர் தனது பேட்டிகளில் அடித்துச் சொல்லும்போது மனம் ரணமாகிறது.