கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி, கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ள படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்.’
மாறுபட்ட கதாபாத்திரங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்தித்தனர்.
நிகழ்வில் நடிகர் பரத் பேசியபோது, ”கடந்த ஐந்து ஆறு வருடங்களில், தமிழ் சினிமா வேறொரு இடத்திற்கு சென்று விட்டது. அதே போல தான் இந்தப் படமும் இருக்கும். எனக்கு இது ஒரு புதுமையான கதாபாத்திரம் , நான் மொத்த கதையையும் கேட்கவில்லை, அவர் சொன்ன சிறு நேரத்திலே, எனக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை வந்தது. அதை நம்பித்தான் இந்த படத்தில் நடித்தேன். அதை சரியாக செய்தும் காட்டி விட்டார். படம் பார்த்தேன் நன்றாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர், முழு ஈடுபாட்டைக் கொடுத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இசை மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது, படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் ரசிகர்களை கண்டிப்பாக சுவாரசியப்படுத்தும். கண்டிப்பாக ஏமாற்றம் தராது” என்றார்.
இயக்குநர் பிரசாத் முருகன் பேசியபோது, ”முதலில் இந்தக் கதையை கேட்டதும் அதற்கு ஆதரவு கொடுத்தது தயாரிப்பாளர் ஆனந்த் சார் அன்றிலிருந்து இன்று வரை என் மீது நம்பிக்கை வைத்தார். பரத் சார், அபிராமி மேடம் என அனைவரும் பெரிய நடிகர்கள், என்னுடைய கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருக்கும், ஒரு ஹைப்பர் லிங்க், நான்லீனியர் படம் சுவாரஸ்யமான படமாக இருக்கும்” என்றார்.
நடிகை அபிராமி பேசியபோது, ”எங்கள் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள். இப்போது தான் நான் இந்தப் படத்தை பார்த்து விட்டு வந்தேன், எங்கள் குழு மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்துள்ளது. ஒரு சில படங்கள் தான், ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மளை பயணிக்க வைக்கும், அது போன்ற படம் தான் இது. இயக்குநர் என்னிடம் கதையை சொல்லும்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் கொடுத்தார். மிகவும் தெளிவாக இருந்தார். இந்தப் படத்தில் பல உணர்வுகளை மிக அழகாக கடத்தியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது, எனக்கு மட்டுமல்ல மொத்த குழுவுக்கும், இது ஒரு முக்கிய படமாக அமையும்” என்றார்.
தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் பேசியபோது, ”படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்துள்ளோம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
நிகழ்வில் நடிகைகள் மிருதலா சுரேஷ், சினிசிவராஜ், பவித்ரா லக்ஷ்மி,
நடிகர் ஷான், பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ், தயாரிப்பாளர் பிஜிஎஸ், இணை தயாரிப்பாளர் ஹாரூன், ஒளிப்பதிவாளர் கண்ணன், இசையமைப்பாளர் ஜோஷ் பிராங்க்ளின் உள்ளிட்டோரும் படம் குறித்து பேசினார்கள்.