கோவாவில் வரும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 9 வரை 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 530 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களை வழியனுப்பும் நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
நிகழ்வில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். இவர்களுடன் 116 அதிகாரிகள் கொண்ட குழுவும் கோவா செல்கிறது.
நிகழ்வில் பேசிய ஐசரி கணேஷ், ‘‘கடந்த தேசிய விளையாட்டு போட்டியில் நமக்கு ஐந்தாம் இடம் கிடைத்தது, இந்த முறை இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்திற்கு வருவார்கள் என நம்புகிறோம். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அளிக்கவுள்ளோம். மட்டுமல்லாது சென்னையில் மினி ஒலிம்பிக் நடத்த உள்ளோம். விளையாட்டில் அரசியலையும் சிபாரிசையும் அனுமதிக்க மாட்டோம். விரைவில் தமிழகத்தில் தேசிய அளவில் போட்டிகள் அதிகம் நடைபெறும்” என்றார்.
ஆதவ் அர்ஜுனா பேசியபோது, ‘‘தமிழ்நாட்டு வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற கனவு விரைவில் நனவாகும். அதற்கான முன்னோட்டமாக ஆசிய விளையாட்டு போட்டி பதக்கங்கள் வென்றுள்ளோம். அந்த வீரர்களை கௌரவிக்கும் விதமாக விரைவில் பிரமாண்ட விழா நடத்தப்படும். அனைத்து வீரர்களும் தங்கள் பெற்றோருடன் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.