குடிப்பழக்கத்தால் நேர்ந்த ஏராளமான உயிரிழப்புகளைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் யார் குடித்தாலும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிற முடிவுக்கு வருகிறார் மக்களின் செல்வாக்கை சம்பாதித்து வைத்திருக்கும் வயது முதிர்ந்த மூக்கம்மா. அவர் முடிவுக்கு மதிப்பு கிடைக்க, அந்த கிராமம் குடிகாரர்கள் இல்லாத கிராமமாக மாறுகிறது.
‘அப்படியெல்லாம் மாற விட்டுவிடுவோமா?’ என தொழிலதிபர் ஒருவர் வரிந்துகட்டிக் கொண்டு, அந்த ஊரில் மது ஆலை திறக்க முடிவெடுக்கிறார். அதற்கான நிலத்தை மதுவுக்கு தடை விதித்த மூக்கம்மாவிடமிருந்தே தட்டிப் பறிக்க திட்டமிடுகிறார். இது கதையாக இருக்க, அந்த திட்டம் என்ன? திட்டத்தை செயல்படுத்த முடிந்ததா? இல்லையா? என்பதெல்லாம் திரைக்கதையாக விரிகிறது.
பிரதான பாத்திரத்தில் வருகிற தருண் கோபி, குடி போதைக்கு ஆளாகி மது ஆலை அமைக்க நிலத்தை எழுதிக் கொடுக்கும் முடிவுக்கு வருவது, தம்பியால் காதல் தோல்விக்கு ஆளாகி வெறியேறி திரிவது என எக்குத் தப்பான பாத்திரத்தில் ஓரளவு எடுபடும்படியான நடிப்பைத் தர,
மக்களை நல்வழிப்படுத்த அன்பான நாட்டைமைத்தனம் செய்கிற கே.ஆர்.விஜயா, அனுபவ நடிப்பால் மூக்கம்மா பாத்திரத்தை தூக்கிப் பிடித்திருக்கிறார்.
களையாக இருக்கிற அன்விஷா தன் காதலைச் சொல்வதில் சொதப்பி, அண்ணன் தம்பிக்குள் மனவிரிசல் உருவாக உதவியிருக்கிறார். கிளைமாக்ஸில் கம்பீரமாய் கத்தியைத் தூக்கி ரத்தம் தெறிக்க விடுகிறார்.
கதை எளிமையாக கடந்துபோக அதற்கேற்ப வில்லத்தனம் செய்துள்ளார் ராஜ்கபூர்.
ஆர்.சுந்தர்ராஜன், சிங்கம் புலியோடு சேர்ந்து கலகலப்பூட்டுகிறார்.
கதாநாயகனுக்கு தம்பியாக பிரகாஷ் சந்திரா, கே.ஆர்.விஜயாவின் தம்பியாக ‘யார்’ கண்ணன், மது ஆலை வராமல் தடுக்க போராட்டம் நடத்துகிற எம்.சரக்குட்டி (இந்த படத்துக்கு கதை, வசனமெழுதியவர்) என மற்ற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு கச்சிதம்.
ஒளிப்பதிவின் தரம் ஆங்காங்கே குறைந்தாலும் கதாபாத்திரங்கள் காட்சிக்கு காட்சி உடுத்தும் புத்தம்புது உடைகள் அந்த குறை தெரியாமல் பார்த்துக் கொள்கின்றன.
பின்னணி இசை ஓகே ரகம்.
ஒருசில குறைகள் தென்படுகிற படைப்புதான் என்றாலும் குடிப்பழக்கம் எனும் அரக்கன் சமூகச் சீர்கேட்டுக்கு வாசல்கதவு திறந்துவிடுபவன் என பதிவு செய்திருப்பதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் ரவி பார்கவன்.