கதை மினிமம்; ஆக்சன் மேக்ஸிமம்… கலக்கியெடுத்த ‘மார்க்.’
சிறுவர், சிறுமிகள் 16 பேர் கடத்தப்பட்டு ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். சுரங்கப்பாதைகள் வழியேதான் அந்த இடத்துக்கு போய்ச் சேர முடியும். அந்த பயங்கரமான இடத்திலிருந்து, குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர்களை மீட்டு வெளியில் அழைத்து வர வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அணை ஒன்று திறக்கப்பட்டு அந்த இடம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கிவிடும்; குழந்தைகளை காப்பாற்ற முடியாது.
அப்படியொரு சூழ்நிலையில் சிக்கியிருக்கும் அவர்களைக் காப்பாற்ற களமிறங்கும் போலீஸ் உயரதிகாரி மார்க் எப்படியெல்லாம் செயல்படுகிறார் என்பது பரபரப்பாக இருக்க, அவர் கடத்தல் கும்பலை கண்டுபிடித்து துவம்சம் செய்வது மாஸாக இருக்கிறது. அத்தோடு விட்டுவிடாமல் முதலமைச்சரைக் கொன்றுவிட்டு தான் முதலமைச்சராக பதவியேற்கத் தயாராகிவிட்ட எல்லாவிதமான பலமும் நிரம்பிய ஒருவருக்கு தண்டனையும் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.
அப்புறமென்ன… காட்சிகள் ஒவ்வொன்றும் பட்டாசுதான். ஆக்சன் காட்சிகள் அத்தனையும் சூறாவளிதான். இயக்கம் விஜய் கார்த்திகேயா
கொலை, கடத்தல் என குற்றச் செயல்களை ஈவிரக்கமின்றி செய்கிற சமூகவிரோதிகளை கண்டறிந்து சுளுக்கெடுக்கும்போது காட்டும் வெறித்தனம், பாடல்களுக்கு அசத்தலாக ஆட்டம்போடும்போது வெளிப்படும் எனர்ஜி என கிச்சா சுதீப்பை காட்சிக்கு காட்சி ரசிக்க முடிகிறது. தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் காப்பாற்றும்போது காட்டுகிற தவிப்பு கலந்த சுறுசுறுப்பு படம் பார்க்கும் நமக்குள் பதைபதைப்பை உருவாக்கிறது.
கேங்ஸ்டர்களுக்கே உரிய திமிர்த்தனமான உடமொழி நவீன் சந்திராவின் மிரட்டலான நடிப்பில் மிகச்சரியாக வெளிப்படுகிறது. நவீன் சந்திராவின் தம்பியாக வருகிற விக்ராந்த் குழந்தைகளைக் கடத்தி வைத்துக் கொண்டு தன் பங்கிற்கு மிரட்டியிருக்கிறார்.
குரு சோமசுந்தரம் கேங்ஸ்டர்களை எல்லாம் திரட்டி மீட்டிங் நடத்தி மார்க்கை போட்டுத்தள்ள அசைன்மென்ட் கொடுக்கிறார். டாம் ஷைன் சாக்கோ முதலமைச்சரைக் கொன்று முதலமைச்சர் பதவிக்கு வர துடிக்கிறார். மார்க்குடன் சேர்ந்து செயல்படுபவர்களில் சிலர் துரோகிகளாக மாறுகிறார்கள். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வில்லன்கள். அத்தனைப் பேரும் ஏற்ற கேரக்டர்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
குற்றவாளிகளை வேட்டையாடுவதற்காக மார்க்’க்குடன் இணைந்து சுற்றித்திரிகிற ரோஷ்னி பிரகாஷ், தீப்ஷிகா இருவரும் அழகாக இருக்க, ஒரு அட்டகாசமான பாடலுக்கு ஆட்டம் போடும் நிஷ்விகா கவர்ச்சியால் கூடுதல் அழகாகத் தெரிகிறார்.
சீரியஸான கதையோட்டத்துக்கு இடையில் யோகிபாபுவின் சின்னச்சின்ன காமெடி கலாட்டாக்கள் எடுபடவில்லை. கடத்தப்பட்ட சிறுவர் சிறுமிகள் படும் அவதிகள் கலங்க வைக்கின்றன.
அஜனிஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் உற்சாகத்தை தூண்ட, பின்னணி இசையும் ஒளிப்பதிவின் தரமும் படத்திற்கு பலமாகியிருக்கிறது.
படத்தில் நடக்கும் பல சம்பவங்கள் அதிகப்படியான சினிமாத்தனம் கொண்டவை; லாஜிக் பற்றி துளியும் யோசிக்காமல் எடுக்கப்பட்டவை. இருந்தாலும் சுதீப்பின் ஸ்டைலான நடிப்பால், பரபரப்புத் தீ பற்றியெரிகிற காட்சிகளால் மார்க் தருகிற அனுபவம் மாஸாக இருக்கிறது; பார்த்தபின் திருப்தி கிடைக்கிறது!
Rating 3 / 5


