ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் இன்று பிறந்தநாள் காண்கிறார். இலங்கையின் மூத்த இசைக் கலைஞரான அவரைப் பற்றிய பெருமித தகவல்களை இந்த நாளில் பகிர்கிறோம்…
ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்கள் ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். இசையை தனது வாழ்க்கையாக்கியவர் இன்றும் இசையோடு பயணம் செய்கிறார். வாழ்ந்தால் இசையோடு தான் என்று தனது வாழ்க்கையைப் பற்றியே பாடல் இயற்றி இசையமைத்து பாடியவர் தனக்கென ஒரு சங்கீத சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். 1968 களில் இலங்கையின் முதல் இசைத் தட்டுகளை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
இலங்கை கலைஞர்களும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தியவர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்கள். இசையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அற்புத கலைஞர். எம்பி பரமேஷ் அவர்கள் இசைத்தட்டுகளை வெளியிடுவதற்கு முன் மேடை நிகழ்ச்சிகள் செய்து புகழ்பெற்றவர். பாடல் எழுதுவது, இசையமைப்பது, விளம்பர வேலைகள் என பொறுப்புக்கள் அதிகமானதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இசை பயணத்தை தொடர்ந்தார்.
காதல் ஒரு நல்ல கலைஞனை உருவாக்கும் என்பதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு எம்பி பரமேஷ் அவர்கள் தான். காதலித்த பெண்ணிடம் தன் காதலை சொல்ல அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் இசை. அந்த காதலும் இசையும் தான் இன்னும் அவரை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
சங்கீத பூசனம் சிவமாலினி மீது எம்பி பரமேஷ் அவர்கள் வைத்த காதல்தான் “உனக்கு தெரியுமா…நான் உன்னை நினைப்பது…”என்ற பாடல் உருவாக காரணமாக இருந்தது. சிவமாலினி அவர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சங்கீதம் படித்துக் கொண்டிருந்த காலம். எம்.பி. பரமேஷ் அவர்கள் இந்த பாடலை இலங்கை வானொலி ஒளிபரப்பு செய்து தன் காதலை மாலினி காதில் விழ வைத்தார். பாடல்கள் தமிழர்கள் வாழும் சகல இடங்களிலும் ஒலித்தது. இந்த பாடல் இலங்கையின் இசை வரலாற்றில் அழிக்க முடியாத சாதனை படைக்க காரணமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அன்றைய காதலர்களின் தேசிய கீதம் “உனக்கு தெரியுமா…நான் உன்னை நினைப்பது…” என்ற பாடல் தான்.
மக்கள் மனதை கொள்ளை அடித்த அந்த பாடல் சங்கீத பரம்பரையில் வந்த சங்கீத பூஷனம் மாலினி அவர்கள் மனதை மயக்காமலா? இருந்திருக்கும் இசையோடு இசை சேர்ந்தது.
ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஸ் அவர்கள் தொடர்ந்து இசையமைத்து சாதனை படைத்த பாடல்கள்:
1. உனக்கு தெரியுமா…உன்னை நினைத்தது…?
2. நீ இன்றி நிலவு…
3. போகாதே தூரம் போகாதே…
4. நீ வாழுமிடமெங்கே…
5. மனமாளிகை ரோஜா…
6. எழுதுகிறேன் பாட்டு…
7. அழைக்கும் ஓசை கேட்கலையா…
8. பாடலெனக்கிது முதல் தரம் தான்…
என்ற பாடல்களை எழுதி இசையமைத்து பாடினார். இந்த எட்டு பாடலையும் மூன்று இசை தட்டுகளில் வெளியிட்டார். அதில் அந்த இசைத் தட்டுகள் மிகப் பெரிய சாதனைகள் படைத்தன. இதில் சிங்கள மொழியிலும் மொழிமாற்றம் செய்து இசைத் தட்டுகளை வெளியிட்டார்.
சிங்கள மொழிகளும் மிகச் சிறந்த வரவேற்பு பெற்ற பாடல்கள்:
1. உனக்கு தெரியுமா உன்னை நினைத்தது…/ Thigu Neela asthekai..
2. மன மாளிகை ரோஜா / Thura are athithe…
3. அலைக்கும் ஓசை கேட்கலையா…/ Sulanga selavan
4. பாடலெனக்கிது முதல் தரம்…/ Agasevan…
என்று ஒரு இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என்பதையும் தாண்டி அந்த காலத்தில் வெளியிட்ட இசைத்தட்டுக்கள் இணையதளம் மற்றும் எந்த ஒரு சோஷியல் மீடியாவும் இல்லாத காலத்தில் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தார்.
அவரது புகழ் இந்தியா முழுவதும் ஒலித்து சாதனை படைத்தது.
இலங்கையில் 30 வருட போரில் மக்கள் உயிர்களையும் உடைமைகளையும் மட்டும் இழக்கவில்லை படைப்புகளையும் உணர்வுகளையும் இழந்து விட்டனர். 1986 இல் ஜெர்மனிக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்த எம்பி பரமேஷ் சிவமாலினி அவர்கள் இசையையும் தனது படைப்புகளையும் கைவிடவில்லை. 2000-ஆண்டு இறைவனைடி சேர்ந்த தன் காதல் மனைவி மாலினி அவர்களின் நினைவுகளோடும், இசையோடும் வாழ்ந்து வருகிறார் எம்.பி. பரமேஷ் அவர்கள்.
பல விருதுகளைப் பெற்ற எம்பி பரமேஸ் அவர்கள் 2019ல் ஜெர்மனியில் வெளிவரும் வெற்றி மணி என்ற தமிழ் பத்திரிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் மற்றும் கனடாவில் வெளியாகும் தமிழ் மிரர் (Tamil Mirror-Canada) பத்திரிக்கையின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைக்கப் பெற்றார்.
எம்பி பரமேஷ் மாலினி தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள். அனைவரும் இசையில் ஆர்வம் உள்ளவர்கள். அவர்களின் மூத்த மகள் ஈழத்து மெல்லிசைக் குயில் பிரபலனி பிரபாகரன்அவர்கள். அப்பாவின் பெயர் சொல்லும் பிள்ளையாக இசைத் துறையில் சாதனை படைத்து வருகிறார். அப்பாவின் இசைப் பணியை தொடர்ந்து செய்ய உறுதுணையாக இருக்கிறார்.
இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் பிரபலானி பிரபாகரன்.
எம்.பி.பரமேஷ், சிவமாலினி தம்பதிகளின் இசை வாரிசு பிரபலனி பிரபாகரன். இந்தியாவில் 2016 ஆம் ஆண்டின் முதல் ஈழத் தமிழ் மகளாக எடிசன் விருது பெற்ற பெருமைக்குரியவர். 2020 ஆம் ஆண்டு எம்.பி. பரமேஸ் அவர்கள் தனது இசை வாழ்வின் கோல்டன் ஜூபிலி விழாவை கொண்டாடினார்.
2000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து தயாராக வைத்திருக்கிறார். அதில் சில நூறு பாடல்கள் பதிவு செய்தும், மீள் பதிவு செய்தும் வருடா வருடம் வெளியிடுகிறார்.
2024-ல் இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பாடல்களாக எழுதி இசையமைத்து வெளியிடும் பணியில் உள்ளார். அந்த பாடல்களும் இலங்கையில் சாதனை படைக்கப் போவது நிச்சயம். ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்களின் பாடல்களை iTunes, sportify, மற்றும்
www.mppramesh.com என்ற இணையதளம் மூலமாகவும் கேட்டு ரசிக்கலாம்.