சூரி ஹீரோவாக நடிக்க, ‘செல்ஃபி’ என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும் படம் ‘மண்டாடி.’
இந்த படம் உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் விளையாட்டு ஆக்ஷன் டிராமாவாக உருவாகிறது.
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரெட் குமாரின் 16வது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, “எனது கனவைப் புரிந்து கொண்டு, என் கதையை கேட்பதற்கு, இந்த வாய்ப்பை அளித்த எல்ரெட் சார் மற்றும் வெற்றிமாறன் சார்க்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். சூரி சாரின் காமெடியன் டூ கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. சூரி சாரின் விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது. அதை சூரி சார் போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.
வெற்றிமாறன் சார், படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இருக்கின்றது எனக்கு ஒரு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையும், எஸ்.ஆர். கதிர் அவர்களின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்ஷன் படமாக உருவாகிக்கொண்டு வருகிறது” என்றார்.
மண்டாடி என்றால் என்ன?
காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர்.
மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல,பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக்கூடியவர் மண்டாடி.
கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் சூரி இந்த படம் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வார். இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார், இதனால் படம் தெற்கிந்தியாவில் பரந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கதா நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார்.
சத்யராஜ், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் தங்களது திறமையான நடிப்பின் மூலம் உணர்வுப்பூர்வான இந்த கதைக்கு பலமளிக்க போகின்றனர்.