மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில் புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. முன்னதாக டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் வாலி மோகன் தாஸ், ”தயாரிப்பாளர் ஜெகதீஷ், இப்படத்தை டீசரில் ஆரம்பித்து, சிங்கிள், டிரெய்லர் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விழா எடுத்து, இப்படத்தை மிகச் சிறப்பாக எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஐஸ்வர்யா தத்தா, அவர் எனது நெருங்கிய நண்பர், இந்த படம் அவரால் தான் துவங்கியது. ஷேன் நிகம் என்னை நம்பி இந்த படத்திற்குள் வந்ததற்கு நன்றி. நிஹாரிகாவுக்கு ஒரு முறைதான், கதை சொன்னேன், என்னை நம்பி வந்தார். கலையரசன் அண்ணன் உடன் நிறைய உரையாடினேன், மிகச் சிறந்த மனிதர். நடிகர் கருணாஸ் என் வாழ்க்கையிலும் அவர் மிக முக்கியமான நபர், இந்தப் படத்தில் மிக சீரியஸ் ரோல் அதை மிக அழகாகச் செய்து தந்தார். இந்தப் படத்திற்காக என்னுடன் உழைத்த அனைத்து படக்குழுவினருக்கும் நன்றிகள். கண்டிப்பாக இந்த படம் உங்களை மகிழ்விக்கும்” என்றார்.
நடிகர் கலையரசன், ”மெட்ராஸ் என் சொந்த ஊர், மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் ஒரு பங்காக நானும் இருப்பது, மகிழ்ச்சி. இந்த படத்திற்கு டிரெய்லருக்கு ஒரு விழா, டீசருக்கு ஒரு விழா, என மிக சிறப்பாக விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு நன்றிகள்.
என்னிடம் சிலர் என்ன தயாரிப்பாளர் நிறையப் பணம் வைத்திருக்கிறாரா? என்று கேட்டனர். இல்லை நல்ல மனது வைத்திருக்கிறார் என்று சொன்னேன். என்னுடன் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பிரசன்னா மிகச் சிறந்த ஒளிப்பதிவைத் தந்துள்ளார். என்னுடைய அடுத்த படத்திற்கும் சாம் சி எஸ் தான் இசையமைப்பாளர். சாம் சி எஸ் இசை எப்போதும் நம்முடைய நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும், அவருக்கு என் நன்றி.
இந்த படத்தில் என் கதாபாத்திரமே மிக வித்தியாசமாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களை மகிழ்விக்கும் படைப்பாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நிறையத் திரைப்படங்கள் வருகிறது, ஒரு பெரிய படம் வரவில்லை என்றவுடன் இத்தனை திரைப்படங்கள் வருவது, நல்ல விஷயம் தான், ஆனால் இது நார்மலாகவே நடந்தால் நன்றாக இருக்கும். ஒரு பண்டிகையின் போது, முன்பெல்லாம் பல திரைப்படங்கள் வெளியாகும் நிலை இருந்தது, அந்த நிலை மீண்டும் வரவேண்டும்” என்றார்.
நடிகர் ஷேன் நிகம், ”நான் ரொம்ப லக்கி, மலையாளத்தில் கூட எனக்கு இப்படிச் சிறப்பான அறிமுகம் கிடைக்கவில்லை. தமிழில் ஒரு மிகச் சிறப்பான திரைப்படம் கிடைத்திருக்கிறது. என்னை இந்த கதாபாத்திரத்திற்கு யோசித்த இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா, நடிகை நிஹாரிகா, தயாரிப்பாளர் ஜெகதீஷ், எடிட்டர் வசந்த் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் ஷேன் நிகம், இந்த படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். நடிகர் கலையரசன், ஐஸ்வர்யா தத்தா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாகப் படைத்துள்ளார்.