வாம்பைர், டிராகுலா என ஹாலிவுட் படங்களில் சூப்பர் ஹீரோக்களை விதவிதமாக பார்த்துள்ள நமக்கு, அதே பாணியில் மலையாள திரையுலகிலிருந்து சூப்பர் ஹீரோயினை பார்க்கிற வாய்ப்பு.
அந்த பரபரப்பான நகரத்தில் உறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்துகிற ஒரு கும்பல் இளம்பெண் சந்திராவை கடத்துகிறது. சந்திராவை விரும்புகிற இளைஞன் பதறிப் போகிறான். கடத்தியவர்களை அவள் கொடூரமாக தாக்கிக் கொல்கிறாள். அதை பார்த்த பிறகு அவள் சாதாரண பெண்ணில்லை; அவள் அதித சக்தி கொண்ட பெண் என்பது அந்த இளைஞனுக்கு தெரிகிறது.
கதை இப்படி சூடு பிடிக்க அந்த பெண் யார்? எதற்காக வந்திருக்கிறாள்? என்பதை எடுத்துச் சொல்லும் காட்சிகளோடு படத்தில் பரபரப்பு தொற்றுகிறது…
சந்திராவாக வருகிற கல்யாணி பிரியதர்ஷன் இளமையான தோற்றத்தால் வசீகரித்து அதிரடி ஆக்சனில் சூப்பர் ஹீரோவாக சுழன்றடித்து ஆச்சரியப்படுத்துகிறார்.
சந்திராவை சாதாரண பெண் என நினைத்து காதல் வசப்பட்ட நிலையில் பொழுதைக் கழிப்பதும், அவள் வினோதமானவள் என தெரிந்து தலை சுற்றி விழுவதுமாக தன் பங்களிப்பை ரசிக்கும்படி தந்துள்ளார் நஸ்லென்.
வில்லனாக டான்ஸ் மாஸ்டர் சாண்டி தன் பங்கிற்கு மிரட்டியிருக்கிறார்.
நஸ்லெனின் நண்பர்களாக வருகிறவர்களின் நடவடிக்கைகள் சிரிப்பூட்டுகின்றன.
துல்கர் சல்மான் (இந்த படத்தின் தயாரிப்பாளர்), டொவினோ தாமஸ் என பெரிய பெரிய நடிகர்கள் கேமியோவாக வந்தாலும் அவர்களும் அடிதடி அதிரடியால் கவனம் பெறுகிறார்கள்.
ஜேக்ஸ் பிஜாய் காட்சிகளுக்குப் பொருத்தமான பின்னணி இசையை வழங்கியிருக்க, ஒளிப்பதிவால் படத்தை பிரமாண்டமாக மாற்றியிருக்கிறார் நிமிஷ் ரவி.
கெட்டவர்களை ஒழிக்க வந்த சக்தியாக சந்திராவை உருவாக்கிய இயக்குநர் டோம்னிக் அருண் அடுத்த பாகத்தை நீலியின் வேட்டையால் அட்டகாசப்படுத்த போகிறார். அந்த நீலி யார் என்பதை இந்த பாகத்திலேயே காண்பித்து ஹைப் ஏற்றியிருக்கிறார்.

