ஜீவி பிரகாஷ், பாரதிராஜா இருவரும் கதைநாயகர்களாக நடித்துள்ள படம். யானைகள் வசிக்கும் காடு கதைக்களமாக, பழகிப்போன காதலும் மாறுபட்ட துரோகமும் திரைக்கதையை ஆக்கிரமித்துள்ள படைப்பாக ‘கள்வன்.’
திருடுவதை தொழிலாக வைத்திருக்கிற, அப்பா அம்மா என சொந்த பந்தங்கள் யாருமில்லாத ஜி.வி.பிரகாஷ், தன்னைப் போலவே ஆதரவற்ற பெரியவர் பாரதிராஜாவை தத்தெடுத்து சொந்த தாத்தாபோல் கவனித்துக் கொள்கிறார். அவரை வைத்து தனக்கு சாதகமான பெரிய விஷயமொன்றை செய்யகொள்ள நினைக்கிறார். அதை அவரால் செய்ய முடிந்ததா இல்லையா என்பதே கள்வனின் கதை… சற்றே விறுவிறுப்பான இந்த கதையில், திருடப் போன இடத்தில் அறிமுகமான பெண்ணுடன் ஜீவி காதல் கொள்வதும், அவரது காதலை அவள் ஏற்க மறுப்பதுமான வழக்கமான சமாச்சாரங்களும் தொடர்கின்றன. இயக்கம் ஒளிப்பதிவு பி.வி.ஷங்கர்
சாமர்த்தியமான திருடன், ஜாலியான காதலன், போலியாய் பாசம் காட்டும் பேரன், நிறைவில் கெட்ட சிந்தனைகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு உழைத்துப் பிழைக்கிற குடும்பஸ்தன் என சித்தரிக்கப்பட்ட பாத்திரத்தில் பொருத்தமான முகபாவங்களால் கவர்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.
இறந்தால் உடலைப் பெற்றுக்கொள்ளக்கூட தனக்கென்று ஒரு ஜீவனுமில்லாத நபராக ஆரம்பக் காட்சிகளில் பரிதாபத்தை அள்ளுகிற பாரதிராஜா, ஹீரோவால் தத்தெடுக்கப்பட்டபின் அதட்டலும் உருட்டலுமாய் வாழ்நாளை உற்சாகமாக கழிப்பது, பேரனுக்கு வேலை பெற்றுத்தர தேவையான முயற்சிகளைச் செய்வது, மணவாழ்க்கை அமைத்துத் தர பேச்சு வார்த்தை நடத்துவது, தனது சர்க்கஸ் சாகச திறமையால் யானைகளிடமிருந்தும் புலிகளிடமிருந்தும் கிராம மக்களைக் காப்பது என கனமான கேரக்டரில் கச்சிதமான பங்களிப்பை பந்தி வைத்திருக்கிறார்.
ஹீரோவின் காதலை ஆரம்பத்தில் மறுத்து பிறகு அவனே உலகம் என மாறிப்போகிற வழக்கமான கதாநாயகிதான் என்றாலும் மலர்ந்த சிரிப்பும், கதைக்கேற்ற நடிப்புமாய் மனதில் நிறைகிறார் இவானா.
ஹீரோவின் மனம் போகிற போக்கிற்கு ஏற்றபடி தன்னையும் தன் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்கிற நண்பனாக தீனா, ஹீரோயினின் தந்தையாக பேராசிரியர் ஞானசம்பந்தன், முக்கியமான பாத்திரங்களில் நக்கலைட்ஸ் குழுவினர் என அனைவரும் எளிமையாக நடித்திருக்க,
ஹீரோவும் அவரது நண்பனும் கோயில் யானையை காட்டு யானையாக பயன்படுத்த நினைத்து பல்பு வாங்குவது, திருடப்போன வீட்டில் தங்களுக்குத் தெரியாமலேயே விடிய விடிய சிக்கிக்கொள்வது என ரசித்துச் சிரிக்க வைக்கும் கலகலப்புக் காட்சிகளும், யானைகள் தாக்குவதற்காக சூழ்ந்த நிலையில் ஜீ வி பிரகாஷ் உயிர் தப்பிக்க போராடுகிற விறுவிறுப்பான அதிரடி சாகசமும் படத்தில் உண்டு.
பிரமாண்டமான காட்டை அதன் அழகு குறையாமல் அள்ளிவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர். யானை சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் ஓரளவு மிரட்டுகின்றன.
ஜீ வி பிரகாஷ் இசையில், குரலில் அடி கட்டழகு கருவாச்சி பாடல் தென்றலின் இதம் தர, மற்ற பாடல்களும் கவர்கின்றன.
உருவாக்கத்தில் சில குறைகள் இருந்தாலும், சற்றே மாறுபட்ட கதைக்களம் கள்வனுக்கு கிடைத்திருக்கிற யானை பலம்!