கே பி ஒய் பாலாவுக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் கதாநாயகனாக சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஃபீல்குட் எமோசனல் டிராமாவாக எழுதி இயக்குகிறார் ஷெரீஃப். இவர் தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே கொண்டாட்டமளிக்கும் வரவேற்பையும் பெற்றவர்.
படம் பற்றி அவரிடம் கேட்டபோது, ”‘ரணம் அறம் தவறேல்’ என்ற த்ரில்லர் படத்திற்கு பிறகு, நான் இயக்கும் இந்தக் கதை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. எனது இரண்டாவது திரைப்படமாக இந்த கதையை தர வேண்டும் என்பதே என் நோக்கம். நான் இந்தக் கதையை தயாரிப்பாளரிடம் கூறியதும், யோசனையில்லாமல் உடனே ‘ஆம்’ என்று சொன்னார். அந்த நம்பிக்கையும், நேரடி ஆதரவும் ஒரு இயக்குநராக எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் உறுதியையும் வழங்கியது. பாலா கதாநாயகனாகவும், தேசிய விருது பெற்ற இயக்குனர்பாலாஜி சக்திவேல் சார்,தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா மேடம் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு பெருமை நிரம்பியது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. நேர்த்தியான சினிமா கொடுக்க வேண்டும் என்ற என் எண்ணத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் அமையும்” என்றார்.
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் ஜெய்கிரண் தயாரிக்கும் முதல் படம் இது. பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.