ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயர் நடிகரின் பெயரோடு சேர்வது வழக்கம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு படத்திலும் நடிக்கிறது. ‘ஜெய் பீம்’, ‘குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அவரது அடுத்த படமான ‘குடும்பஸ்தன்’ ஜனவரி 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படம் பற்றி நடிகர் மணிகண்டன் பேசியபோது, “நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் இருந்தே நான் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியின் ரசிகன். எண்டர்டெயின்மெண்ட்டில் அவர் புதிய அலையை உருவாக்கினார் என்பதில் சந்தேகம் இல்லை. ’குட்நைட்’ படத்தின் ரிலீசுக்கு முன்பே இந்த படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்தோம். ராஜேஷ்வருக்கு பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் திறன் உள்ளது. ’குடும்பஸ்தன்’ படம் வெளியான பிறகு நிச்சயம் ராஜேஷ்வர் அனைவராலும் விரும்பப்படும் இயக்குநராக இருப்பார்” என்றார்.
முந்தைய படங்களைப் போல நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் பற்றி கேட்டபோது, “நடுத்தர குடும்பங்களில் எப்போதும் அழகான மற்றும் தனித்துவமான ஒன்று இருக்கும். ஒரே மாதிரியான பின்னணியைக் கொண்ட பத்துக் குடும்பங்களை சந்தித்தால், பத்து விதமான கதைகள் கிடைக்கும். இவர்களது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சிறிய சம்பவங்கள் கூட சுவாரஸ்யமாக இருக்கும். ‘குடும்பஸ்தன்’ படத்திலும் இதுதான் இருக்கிறது. என்னுடைய முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக, படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நிச்சயம் என்ஜாய் செய்யலாம்” என்கிறார்.