மணிகண்டன், ஷான்வி நடிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரித்துள்ள ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. முன்னதாக டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, “என்னுடைய கனவை அடைய ஆதரவு கொடுத்த என் குடும்பத்திற்கு நன்றி. நக்கலைட்ஸூம் என் குடும்பம்தான். தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். முத்தமிழ், நிவி, ஜென்சன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஜென்சன் தமிழ் சினிமாவின் அடுத்த நாகேஷ். பிரசன்னா எனக்கு பல விஷயங்களில் வழிகாட்டியுள்ளார். படம் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.
நடிகர் மணிகண்டன், “இரண்டரை வருடத்திற்கு முன்பு ராஜேஷை இந்தக் கதைக்காக சந்தித்தேன். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படம் ஏற்கனவே ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தில் நான் நடித்தாக வேண்டும் என காத்திருந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இயக்குநர் ராஜேஷ் ஒரு அட்வென்ச்சர் கதை எழுததான் நினைத்தார். பிறகு இன்றைய தேதியில் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் என்பதால் அதையே படமாக்கியிருக்கிறார். பார்வையாளர்களுக்கும் பல வழியில் இது கனெக்ட் ஆகும்.
குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ படமும் ‘குடும்பஸ்தன்’ படத்தோடு வருகிறது. நான் ஒரு படம் பார்த்து எமோஷனல் ஆகி அழுவது அரிது. அது ’பாட்டல் ராதா’ படத்தில் நடந்திருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள். ‘குடும்பஸ்தன்’ படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கொங்கு தமிழை பேச நக்கலைட்ஸ் டீம் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். பிரசன்னா சார் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார்.
டெக்னிக்கல் டீமும் கஷ்டப்பட்டு சிறப்பாக செய்திருக்கிறார்கள். கோபப்படாத கனிவான தயாரிப்பாளர் வினோத். என் வாழ்க்கையில் அதிக சண்டை போட்ட நபர்களில் இயக்குநர் ராஜேஷூம் ஒருவர். அது எல்லாம் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகதான். அதை சரியான விதத்திலும் அவர் புரிந்து கொண்டார். சினிமாவில் சின்ன பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாய் இருக்கிறது. நான் செய்த சின்ன வேலைகளுக்கு எல்லாம் பெரிய பாராட்டு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படமும் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
எழுத்தாளர் நக்கலைட்ஸ் பிரசன்னா பாலச்சந்தர், “நக்கலைட்ஸ் என்ற யூடியூப் சேனலில் ஆரம்பித்த இந்த பயணம் இப்போது முழுமையான விஷயமாக திரைப்படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படம் சாத்தியமாவதற்கு பலபேர் காரணம். ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ‘குடும்பஸ்தன்’ என்ற பெயர் பழையதாக இருந்தாலும் கதை எப்போது பார்த்தாலும் புதிதாக இருக்கும். இதன் கதாநாயகன் நம்மில் ஒருவராக சராசரியாக எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் யோசித்தபோது, மணிகண்டன் சரியாக இருப்பார் என நானும் ராஜேஷூம் அவரிடம் பேசினோம். எங்களை விட மணிகண்டன் இந்த கதையை நம்பினார். நடிகராக மட்டுமல்லாது கதைக்கும் அவர் நிறைய இன்புட் கொடுத்தார். இந்த கதை அறுசுவை உணவு சாப்பிட்ட உணர்வு கொடுக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
நடிகர் குரு சோமசுந்தரம், “இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடிச்ச ஜானர், சீரியஸான காமெடி கதை கொண்ட படம் இது. நான் எதிர்பார்த்திருந்த சமயத்தில் இயக்குநர் ராஜேஷ் இந்த கதையோடு வந்தார். எல்லா விதத்தில் இருந்தும் சினிமாவில் நுழையலாம். இவர்கள் யூடியூப் வழியாக வந்திருப்பது மகிழ்ச்சி. இவர்களுக்கு பார்வையாளர்கள் நீங்கள் நல்ல வரவேற்பு கொடுக்க வேண்டும். ‘விக்ரம் வேதா’, ‘காலா’வில் மணிகண்டனைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பு என்னை பிரமிக்க வைத்தது. படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. பாருங்கள்” என்றார்.